Published : 17 Nov 2025 06:05 AM
Last Updated : 17 Nov 2025 06:05 AM
குமுளி: மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ல் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் ஏற்றி, மங்கல இசை முழங்க நடையைத் திறந்து வைத்தார். பின்னர், 18-ம் படி வழியே கீழிறங்கி ஆழிக்குண்டத்தில் தீபம் ஏற்றினார்.
அருண்குமார் நம்பூதிரியின் பணிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததால், சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகள் பிரசாத் நம்பூதிரி, மனு நம்பூதிரி ஆகியோரை பொறுப்பேற்கச் செய்யும் வகையில் அவர்களின் கையைப் பிடித்து 18-ம்படி வழியே சந்நிதானத்துக்கு அழைத்து வந்தார். அங்கு இருவருக்கும் விபூதிப் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு புதிய மேல்சாந்திகள் மீது புனித தீர்த்தம் தெளித்து மூலமந்திரத்தை உபதேசித்து, பதவி ஏற்கச் செய்தார். இருவரும் ஓராண்டுக்கு சபரிமலையிலேயே தங்கி வழிபாடுகளை மேற்கொள்வார்கள். பதவியேற்பு சடங்கு நிகழ்ச்சிக்குப் பிறகு கோயிலில் வேறு வழிபாடுகள் இன்றி இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளார்.
மண்டல வழிபாடு தொடங்கியதை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சரண கோஷத்துடன் தர்ம சாஸ்தாவை வழிபட்டு வருகின்றனர். முதல் நாளான நேற்று ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது. பிற்பகலில் பம்பை, எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. சத்திரம், எரிமேலி, அழுதகடவு உள்ளிட்ட வனப் பாதைகள் இன்று காலை 8 மணி முதல் திறக்கப்பட உள்ளன.
வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பதோ, அதிக இரைச்சலுடன் பயணிப்பதோ கூடாது. வழியில் நீர் நிலைகளில் கவனமுடன் நீராட வேண்டும். பக்தர்கள் பொதுவெளிகளை அசுத்தம் செய்யக் கூடாது. வனப் பாதையை விட்டு விலகிச் செல்லக் கூடாது என்று கேரள வனத் துறையினர் அறிவுறுத்தி
உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT