Published : 04 Nov 2025 05:16 PM
Last Updated : 04 Nov 2025 05:16 PM
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே சடையாண்டி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நள்ளிரவில் 105 கிடாக்கள் வெட்டி விடிய விடிய அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சடையாண்டி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.

அதன்படி நேற்று(நவ.3) நள்ளிரவு சடையாண்டி கோயில் விழா கோலாகலமாக தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் டி.அணைக்கரைப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர். மொத்தம் 105 கிடா வெட்டி சமையல் பிரமாண்டமாக நடைபெற்றது.
நள்ளிரவில் தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய நடைபெற்ற இந்த அசைவ விருந்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர். இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், ஆண்களின் மனோவலிமை அதிகரிக்கவும் இந்த வழிபாடு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT