Published : 28 Oct 2025 06:44 AM
Last Updated : 28 Oct 2025 06:44 AM
சென்னை / திருத்தணி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி சுப்பிரமணியர் கோயிலில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி விழா கடந்த 21-ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் தொடங்கியது.
அக். 22-ம் தேதி முதல் லட்சார்ச்சனை தொடங்கியது. தொடர்ந்து, தினசரி காலை, மாலையில் இருவேளையும் பூஜைகள், சுவாமி வீதி உலாவும் நடந்தது. விழாவின் பிரதான நாளான நேற்று, உச்சி காலத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு அம்பாளிடம் வேல் பெற்று, சூரபத்மனை வதம் செய்ய முருகப் பெருமான் புறப்பட்டார்.
நேற்று இரவு சூரசம்ஹாரம் தொடங்கியது. முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. இன்று வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருமண நிகழ்வு முடிந்ததும் முருகப் பெருமானுக்கு மொய் எழுத பக்தர்கள் அழைக்கப்படுவர். மொய் எழுதும் தொகைக்கான ரசீது, பிரசாதங்கள் வழங்கப்படவுள்ளன. இரவு 8 மணிக்கு திருமண விருந்து அளிக்கப்படுகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பெசன்ட்நகர் அறுபடைவீடு முருகன் கோயில், கந்தக்கோட்டம், மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர், குமரக்கோட்டம், குன்றத்துார், சிறுவாபுரி, திருப்போரூர், வல்லக்கோட்டை உட்பட சென்னை மற்றும் புறநகரில் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய விழாவான புஷ்பாஞ்சலி நேற்று நடைபெற்றது. இதில், நேற்று அதிகாலை மூலவர் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, நேற்று மாலை 4 மணியளவில், சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான சுந்தர விநாயகர் கோயில் இருந்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பல வகையான மலர்களை கோயில் ஊழியர்கள், பக்தர்கள் ஊர்வலமாக சரவணப் பொய்கை வழியாக சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு சென்றனர். பிறகு, மாலை 5 மணியளவில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு பல வகையான மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT