Published : 22 Oct 2025 06:20 AM
Last Updated : 22 Oct 2025 06:20 AM
சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரசம்ஹாரம் அக்.27 அன்றும், திருக்கல்யாண வைபவம் அக்.28-ம் தேதியன்றும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி திருவிழா, வரசித்தி விநாயகர் மூஷிக வாகன புறப்பாட்டுடன் அக். 21-ம் தேதி (நேற்று) மாலை கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முதல் நாள் நிகழ்வாக மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை அக். 22-ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க தொடங்குகிறது.
இரவு 8 மணிக்கு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து அக்.23-ம் தேதி பாலசுப்பிரமணிய சுவாமி சந்திரபிரபை புறப்பாடும், அக்.24-ம் தேதி ஆட்டுக்கிடா வாகன புறப்பாடும், அக்.25-ம் தேதி நாக வாகன புறப்பாடும், அக்.26-ம் தேதி மங்களகிரி விமான புறப்பாடும் நடைபெறவுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வாக அக்.27-ம் தேதி இரவு 8 மணிக்கு சூரசம்ஹார உற்சவமும், அதைத் தொடர்ந்து சண்முகப் பெருமான் மயில் வாகன புறப்பாடும் நடைபெறும். மறுநாள் அக்.28 இரவு 7 மணிக்கு வள்ளி - தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து பல்வேறு வைபவங்களுடன் விழா நடைபெற்று, நவ.1-ம் தேதி அருணகிரிநாதர் புறப்பாடுடன் நிறைவடைகிறது. விழாவுக்கான யாகசாலை பூஜைகள் அக்.22-ம் தேதி மாலை 7 மணிக்கு தொடங்கி 27-ம் தேதி உச்சிகால பூர்ணாஹூதி பூஜையுடன் நிறைவு பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT