Published : 11 Oct 2025 06:35 AM
Last Updated : 11 Oct 2025 06:35 AM

திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி அஹோபில மடத்​தில் சுவாமி தேசிகன் உற்​சவத்​தையொட்டி தேரோட்​டம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். திரு​வல்​லிக்​கேணி தேரடி தெரு​வில் உள்​ள அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்​திரமகா தேசிகன் நினை​வாக ஆண்​டு ​தோறும், உற்சவ விழா கொண்டாடப்படும்.

அந்​த வகையில், இந்த ஆண்டு ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்​திர மகா தேசிகன் உற்​சவம் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. உற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் கடந்த 28-ம் தேதி நடை​பெற்​றது. இந்த ஆண்டு உற்​சவத்​தில் புதி​தாக திருத்​தேர் ஏற்​பாடு செய்​யப்​பட்டு முதல்​முறை​யாக தேரோட்​டம் நடந்​தது குறிப்​பிடத்​தக்​கது. இந்த நிகழ்​வில், அஹோபில மடத்​தின் 46-வது பட்​டத்து அழகிய சிங்​கர் ஸ்ரீமதே ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்​க​நாத யதீந்​திர மஹா தேசிகன் சுவாமிகள் பங்​கேற்று பக்​தர்​களுக்கு ஆசி வழங்​கி​னார்.

இந்​நிலை​யில், ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்​திர மகா தேசிக​னின் குரு​வான சுவாமி தேசிக​னின் அவதா​ரத் திரு​நாளை​யொட்​டி, திரு​வல்​லிக்​கேணி அஹோபில மடத்​தில் சுவாமி தேசிகன் உற்​சவம் அக்​.2-ம் தேதி தொடங்கி 10 நாட்​கள் நடை​பெற்று வரு​கிறது. அதன்​படி, அக்​.2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, தினசரி காலை​யில் பல்​லக்கு சேவை​யும், மாலை​யில் கேட​யம், சிம்ம வாக​னம், சூரியபிரபை, சந்​திர பிரபை, ஹம்ச வாக​னம், யானை வாக​னம், யாளி வாக​னம், குதிரை வாக​னத்​தில் வீதி உலா நடந்​தது.

விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது. காலை 7 மணிக்கு திருத்​தேரில் சுவாமி தேசிகன் எழுந்​தருளி​னார். திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள் கோயி​லில் இருந்து தேர் புறப்​பட்​டது. பக்​தர்​கள் வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதி​களில் தேர் வலம் வந்​தது. அப்​போது பக்​தர்​கள் சுவாமி தேசிகனை தரிசனம் செய்து வழிபட்​டனர்.

2 மணி நேரத்​துக்கு பிறகு தேர் நிலையை வந்து அடைந்​தது. அதனை தொடர்ந்து மாலை​யில் திரு​மஞ்​சனம் நடை​பெற்​றது. இந்த நிகழ்​வில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். இன்று மங்​களாஸாசன​மும், மங்​களகிரி​யும் நடை​பெறுகிறது. அக்​.14-ம் தேதி விடை​யாற்றி உற்​சவம் நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x