Published : 27 Sep 2025 06:43 AM
Last Updated : 27 Sep 2025 06:43 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தாரளமாக நன்கொடைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதுபோல் நன்கொடை வழங்குவோருக்கு, அவர்களின் நன்கொடைக்கேற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
அதன் விவரங்கள் வருமாறு: ஒவ்வொரு ரூ. 10 ஆயிரம் நன்கொடைக்கும், ஒரு நபருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படுகிறது. இதுவே ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினால், அந்த பக்தர் வாணி அறக்கட்டளை மூலம் 9 முறை சுவாமியை வெகு அருகில் தரிசனம் செய்து கொள்ளலாம்.
ரூ.5 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்கள், ஆண்டுக்கு ஒருமுறை சுபதம் நுழைவுவாயில் வழியாக 5 பக்தர்களுக்கு தரிசன பாக்கியம் வழங்கப்படும். ஒரு நாள் திருமலையில் தங்குவதற்கு அறையும் வழங்கப்படும். மேலும், தரிசனம் முடிந்ததும் சிறிய லட்டு பிரசாதங்கள் 6, ஒரு ரவிக்கை, ஒரு துண்டு ஆகியவை வழங்கப்படும்.
ரூ.10 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்கள், ஆண்டுக்கு 3 முறை 5 பக்தர்கள் சுபதம் நுழைவுவாயில் வழியாக சுவாமியை தரிசிக்கலாம். இவர்களுக்கு திருமலையில் தொடர்ந்து 3 நாட்கள் தங்குவதற்கு வசதிகள் செய்து தரப்படும். மேலும், ஒவ்வொரு முறையும் தரிசனம் செய்யும்போது, 10 சிறிய லட்டு பிரசாதம், 5 மகா பிரசாதம் வழங்கப்படும். இத்துடன் ரவிக்கை, துண்டு ஆகியவை வழங்கப்படும்.
ரூ.25 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை 5 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். மேலும் 3 நாட்களுக்கு திருமலையில் தங்குவதற்கு விடுதியும் வழங்கப்படும். மேலும் 20 சிறிய லட்டு பிரசாதங்கள், 10 மகா பிரசாதங்கள், ஒரு ரவிக்கை,ஒரு துண்டு, 50 கிராம் எடையில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.50 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்காக ஆண்டுக்கு 3 முறை 5 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். ஒரு முறை 5 பேருக்கு சுபதம் நுழைவுவாயில் வழியாக சுவாமி தரிசனம் வழங்கப்படும். தரிசனம் முடிந்ததும் இவர்களுக்கு 4 பெரிய லட்டு பிரசாதம், 5 சிறிய லட்டு பிரசாதங்கள், 10 மகா பிரசாதங்கள், ஒரு துண்டு, ஒரு ரவிக்கை, 5 கிராம் எடையில் தங்க நாணயம், 50 கிராம் எடையில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.75 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்காக ஆண்டுக்கு ஒரு நாள் 5 பேருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும். 3 முறை 5 பேருக்கு பிரேக் தரிசனம், 2 முறை சுபதம் நுழைவுவாயில் வழியாக 5 பேர் சுவாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
இவர்களுக்கு 3 நாட்கள் வரை திருமலையில் தங்கும் அறைகள் வழங்கப்படும். மேலும் 6 பெரிய லட்டுகள், 10 சிறிய லட்டுகள், 10 மகா பிரசாதங்களும் வழங்கப்படும். இது தவிர ரவிக்கை, துண்டு, 5 கிராம் எடையில் தங்க நாணயம், 50 கிராம் எடையில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.1 கோடி வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை 5 பேருக்கு சுப்ரபாத சேவை வழங்கப்படும். ஆண்டுக்கு 3 முறை விஐபி பிரேக் தரிசனமும், 3 முறை சுபதம் நுழைவுவாயில் மூலமாக சுவாமி தரிசன ஏற்பாடுகளும் செய்யப்படும். திருமலையில் இவர்கள் 3 நாட்கள் தங்க வைக்கப்படுவர். இவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 8 பெரிய லட்டு, 15 சிறிய லட்டுகள்,10 மகா பிரசாதங்கள், ஒரு ரவிக்கை,ஒரு துண்டு ஆகியவை வழங்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை இவர்களுக்கு 5 கிராம் எடையில் தங்க நாணயம், 50 கிராம் எடையில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.1 கோடிக்கும் மேல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை 5 பேருக்கு சுப்ரபாத சேவை வழங்கப்படும். 3 முறை 5 பேருக்கு விஐபி பிரேக் தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும். 4 முறை 5 பேருக்கு சுபதம் நுழைவுவாயில் வழியாக தரிசனம். 10 பெரிய லட்டுகள், 20 சின்ன லட்டுகள், 10 மகா பிரசாதங்கள், ஒரு துண்டு, ஒரு ரவிக்கை ஆகியவை வழங்கப்படும்.
ஆண்டுக்கு ஒரு முறை வேத பண்டிதர்களால் ஆசீர்வாதம் செய்யப்படும். ஆண்டுக்கு ஒருமுறை 5 கிராம் எடையில் தங்க நாணயமும், 50 கிராம் எடையில் வெள்ளி டாலரும் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கினால், வருமான வரி 80 (ஜி)யின் படி வரி விலக்கு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT