Published : 26 Sep 2025 01:22 PM
Last Updated : 26 Sep 2025 01:22 PM

மகாலட்சுமி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு

பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில், கொலு வைப்பது தொடர்பாக விவரமாகக் கூறப்பட்டுள்ளது. சுரதா என்ற அரசர், தனது பகைவர்களுடன் போர் புரியும்போது வெற்றி அடைய என்னென்ன வழிகள் உள்ளன என்று குரு சுமதாவிடம் ஆலோசனை கேட்கிறார்.

குருநாதரும் அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார். அதன்படி, அரசர் சுரதா, தூய்மையான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்கிறார். அதை காளியாக அலங்கரித்து, தெய்வப் பற்றுடன் உண்ணா நோன்பு இருந்து வழிபடுகிறார்.

அம்பிகை அவரது வேண்டுதலை நிறைவேற்றி, அரக்கர்கள், பகைவர்களை அழித்து, ஒரு புதிய யுகத்தையே உருவாக்குகிறாள். மனம் மகிழ்ந்த அரசர், அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கிறார். அம்பிகையும், “ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையை வைத்து என்னை பூஜித்தால், நான் உனக்கு அனைத்து நன்மைகளையும் அளிப்பேன்” என்று அருள்பாலிக்கிறாள். இதன் காரணமாகவே நவராத்திரியில் கொலு வைத்து அம்பாளை பூஜிக்கும் மரபு ஏற்பட்டது.

களிமண் பொம்மைகள், மர பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள் போன்றவை அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தன. இப்போது காலத்துக்கு ஏற்ப பீங்கான், கண்ணாடி பொம்மைகள் செய்யப்பட்டு கொலுவில் வைக்கப்படுகின்றன. சிம்மாசனத்தில் வெற்றித் திருக்கோலத்தில் அமர்ந்துள்ள மகாலட்சுமியை வழிபடுவதால் சூரிய தோஷம் நிவர்த்தியாகும். நிம்மதியான வாழ்க்கை அமையும். 5 வயது சிறுமியை ரோகிணி வேடத்தில் நவக்கிரக நாயகியாக நினைத்து, ஸ்ரீஸ்துதி சொல்லி பூஜிக்க வேண்டும்.

கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை அணிவித்து, பைரவி, சௌராஷ்டிரம் ராகங்களில் பாடல்கள் பாடி, செந்தாமரை, ரோஜா, ஜாதி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். தயிர் சாதம், உளுந்து வடை, அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் ஆகியவற்றில் முடிந்ததை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x