Published : 24 Sep 2025 11:47 AM
Last Updated : 24 Sep 2025 11:47 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 29-ம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 2-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, காலை 7.05 மணிக்கு கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.
பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 28-ம் தேதி தங்க கருட சேவையும், 29-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 30-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.
9-ம் நாளான அக்டோபர் 2-ம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது. அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT