Published : 24 Sep 2025 01:06 AM
Last Updated : 24 Sep 2025 01:06 AM

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரன்​பட்​டினம் முத்​தா​ரம்​மன் கோயி​லில் பிரசித்தி பெற்ற தசரா திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. இதையொட்​டி, பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் காப்பு கட்டி வேடமணிந்​தனர். முக்​கிய நிகழ்ச்​சி​யான மகிஷா சூரசம்​ஹாரம் அக். 2-ம் தேதி நடை​பெறுகிறது.

கொடியேற்​றத்தை முன்​னிட்டு நேற்று அதி​காலை 2 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, பல்​லக்​கில் கொடிப்​பட்​டம் வீதி​யுலா வந்து கோயிலை சேர்ந்​தது. பின்​னர், சன்​ன​திக்கு எதிரே​யுள்ள கொடி மரத்​தில் அதி​காலை 5.36 மணிக்கு ‘ஓம் காளி ஜெய் காளி’ என்ற பக்தி கோஷம் விண்​ணைப் பிளக்க கொடியேற்​றம் நடை​பெற்​றது. தொடர்ந்​து, கொடி மரத்​துக்கு பால், பன்​னீர், சந்​தனம் உள்​ளிட்ட 16 வகை​யான பொருட்​களால் அபிஷேகம் மற்​றும் தீபா​ராதனை நடை​பெற்​றது. இதில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டனர்.

தொடர்ந்​து, பக்​தர்​கள் கோயில் பூசா​ரி​களிடம் காப்பு கட்​டி, தாங்​கள் விரும்​பிய வேடங்​களை அணிந்​து, ஊர் ஊராகச் சென்று கோயிலுக்கு காணிக்கை வசூலிக்​கத் தொடங்​கினர். விழா நாட்​களில் தின​மும் இரவு அன்னை முத்​தா​ரம்​மன் பல்​வேறு வாக​னங்​களில், வெவ்​வேறு திருக்​கோலத்​தில் எழுந்​தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடை​பெறும். 10-ம் நாள் விழா​வான அக். 2-ம் தேதி முத்​தா​ரம்​மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்​காரம் நடை​பெறுகிறது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்​கார பூஜை நடை​பெறுகிறது. நள்​ளிரவு 12 மணிக்கு அன்னை முத்​தா​ரம்​மன் சிம்ம வாக​னத்​தில் கடற்​கரை சிதம்​பரேசுவரர் கோயிலுக்கு முன்​பாக எழுந்​தருளி மகிஷா சூரனை சம்​ஹாரம் செய்​யும் நிகழ்ச்சி நடை​பெறும்.

அக்​டோபர் 3-ம் தேதி அதி​காலை கடற்​கரை​யில் அன்​னைக்கு அபிஷேக ஆராதனை​யும், அதி​காலை 2 மணிக்கு சிதம்​பரேசுவரர் கோயில் முன்பு எழுந்​தருளி சாந்​தாபிஷேக ஆராதனை​யும், அதி​காலை 3 மணிக்கு அபிஷேக மேடை​யில் அபிஷேக​மும் நடை​பெறும். பின்​னர், தேரில் அம்​மன் பவனி வரு​கிறார். காலை 6 மணிக்கு பூஞ்​சப்​பரத்​தில் அம்​மன் வீதி​யுலா புறப்​படு​கிறார். மாலை 4.30 மணிக்கு சப்​பரம் கோயிலுக்கு வந்து சேர்ந்​தவுடன் பக்​தர்​கள் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்​வார்​கள். நள்​ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x