Published : 15 Sep 2025 06:24 AM
Last Updated : 15 Sep 2025 06:24 AM
சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அவதார தின நூற்றாண்டு விழா 2026 நவம்பர் மாதம் வரை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு சேவைப் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் தேசியத் தலைவர் நிமிஷ் பாண்டியா நேற்று கூறியதாவது: பகவான் புட்டபர்த்தி ஸ்ரீ சாய் பாபாவின் அருளாசியுடன் ஆன்மிக வழியில் அனைவருக்கும் அன்பை பகிர்ந்து, இயலாதவர்களுக்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.
அவரது வழிகாட்டுதலின்படியே கல்வி, மருத்துவ சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். திறன் மையங்கள் மூலமாக சுயதொழிலுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இதற்கிடையே, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அவதார தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவரது 100 வது அவதார தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நூற்றாண்டு விழா கடந்த ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி 2026 நவம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும்.
இந்த ஒன்றரை ஆண்டுகளில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் நடத்துதல், மரம் நடுதல், கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, புட்டபர்த்தியில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நூற்றாண்டு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ‘சுந்தரம்’ ஆலயத்தில் நவம்பரில் ஒருவார காலத்துக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி மரங்கள் நட இலக்கு வைக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 25,000 உட்பட நாடு முழுவதும் இதுவரை சுமார் 40 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. 1,000 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் 125 பேர் பலன் பெற்றுள்ளனர்.
இதுபோல, இன்னும் பல்வேறு சேவைப் பணிகளை முன்னெடுக்க உள்ளோம். மேலும், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறந்த சமூக சூழலை உருவாக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோட்டீஸ்வர ராவ், தென்மண்டல பொறுப்பாளர் முகுந்தன், தமிழக தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT