Published : 30 Aug 2025 06:37 AM
Last Updated : 30 Aug 2025 06:37 AM
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப்பெருவிழா நேற்று மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.8-ம் தேதி வரை நடைபெறும்.
அதன்படி, நடப்பாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, பேராலய முகப்பில் கொடி ஊர்வலம் தொடங்கி, பேராலயத்தைச் சுற்றிலும் குவிந்திருந்த பக்தர்களுக்கு மத்தியில் நடைபெற்றது. தொடர்ந்து, கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாகச் சென்ற கொடி ஊர்வலம் மீண்டும் பேராலயத்தை அடைந்தது.
தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார். தொடர்ந்து, திருத்தலக் கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஆவே மரியா’ என்றும், ‘மாதாவே’ என்றும் முழக்கமிட்டபடி, தொடர்ந்து, வாணவேடிக்கை நடைபெற்றது. இந்நிகழ்வில், பேராலய அதிபர் இருதயராஜ், துணை அதிபர் அற்புதராஜ், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செப்.7-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கொங்கணி ஆகிய மொழிகளில் விண்மீன் ஆலயம், பேராலய மேல் கோயில், பேராலய கீழ் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி செப். 7-ம் தேதி மாலை நடைபெறும். செப். 8-ம் தேதி மாலை கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT