Published : 27 Aug 2025 08:28 AM
Last Updated : 27 Aug 2025 08:28 AM
திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டியில் நேற்று நடைபெற்ற கற்பக விநாயகர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் விநாயக சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 23-ம் தேதி கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, நேற்று பெரிய தேரில் விநாயகர், சிறிய தேரில் சண்டிகேசுவரர் எழுந்தருளினர். மாலை 5.40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சண்டி கேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு மூலவருக்கு முக்குறுணி மோதகம் படையலிடப்படும். இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT