Published : 24 Aug 2025 10:47 AM
Last Updated : 24 Aug 2025 10:47 AM
புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு, மூத்தக் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று, இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 2025- 26ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாண்டு 2,000 பக்தர்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
இதை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2 ஆயிரம் பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர். புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணமானது 4 கட்டங்களாக, அதாவது, செப்.20,27, அக்.4,11 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளன.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்துக்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்.25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT