Published : 17 Aug 2025 12:42 AM
Last Updated : 17 Aug 2025 12:42 AM
திருவள்ளூர்: அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை திருவிழா, கடந்த 14-ம் தேதி ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆடிக் கிருத்திகை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷே கம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தங்கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல், காவடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவருக்கு தீபாராதனை நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிறமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் குவிந்தனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல வகையான காவடிகளை சுமந்தும், சரவணப் பொய்கை குளம் மற்றும் நல்லாங்குளம் ஆகிய பகுதிகளில் தலைமுடி காணிக்கை அளித்தும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமள ராவ் தலைமையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, 17-வது முறையாக முருகப் பெருமானுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்து வழங்கினர். அந்த வஸ்திரம், மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இரவு 7 மணிக்கு சரவணப் பொய்கையில் 3 நாள் தெப்பத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. வண்ண மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, 3 முறை குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி நகரின் பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி காஞ்சிபுரம் டிஐஜி தலைமையில் 1,600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT