Published : 29 Jul 2025 05:38 AM
Last Updated : 29 Jul 2025 05:38 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘கோவிந்தா கோபாலா’ என முழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்டாள் ரெங்க மன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவையொட்டி தினமும் காலை ஆடிப்பூரக் கொட்டகையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது.
ஆடிப்பூர திருவிழாவின் 5-ம் நாள் காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 5 கருட சேவையும், 7-ம் நாள் விழாவில் சயன சேவையும் நடைபெற்றன. 8-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு ரெங்கமன்னார் தங்கக் குதிரை வாகனத்திலும், ஆண்டாள், பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
கள்ளழகர் சீர்வரிசை: நேற்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, சர்வ அலங்காரத்தில் ஆடிப்பூரதேரில் எழுந்தருளினர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர்கோயில் கள்ளழகர் பெருமாள் சீர்வரிசையாக அனுப்பிவைத்தபட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை 9.10 மணிக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு 7 வடங்களைப் பிடித்து ரத வீதிகள் வழியாக தேரை இழுத்தனர். பிற்பகல் 1 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
போலீஸ் பாதுகாப்பு: விழாவில் எம்.எல்.ஏக்கள், தங்கப்பாண்டியன், ஆர்.ஆர் சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா, கோட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன் தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT