Last Updated : 30 May, 2025 05:41 PM

 

Published : 30 May 2025 05:41 PM
Last Updated : 30 May 2025 05:41 PM

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ல் குடமுழுக்கு விழா: முன்னேற்பாடுகளுக்கு ஆட்சியர் அறிவுரை

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசியது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஜூலை 1-ம் தேதி தொடங்குகின்றன. விழாக் காலங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, தினமும் 5 லட்சம் லிட்டர் வீதம் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்தல், திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து நிறுத்துமிடங்களில் குடிநீர் மற்றும் தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்தல், திருக்கோயில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகளை அகற்றுதல் மற்றும் நகர் முழுவதும் அவ்வப்போது குப்பையை அகற்றுதல் பணிகளை நகராட்சி செய்ய வேண்டும். ஆவுடையார்குளத்துக்கு போதிய தண்ணீர் திறந்துவிட நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்செந்தூர் – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் பழுதடைந்துள்ள சாலைகளை முன்கூட்டியே சீர் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை இணைப்பு அடைப்புகளை சரி செய்ய வேண்டும். தங்குதடையின்றி மின் விநியோகம் செய்ய வேண்டும். குடமுழுக்கு அன்று பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னக ரயில்வே மூலம் சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விழாக் காலங்களில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருக்கோயில் வளாகத்தில் மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடனும், அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதியுடனும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தீயணைப்பு ஊர்தி மற்றும் மருத்துவ ஊர்தியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பக்தர்களுக்கு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்யவும், போக்குவரத்தை சீர் செய்யவும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாகசாலையின் அருகில் அமைக்கப்படவுள்ள மர கேலரி மற்றும் ராஜகோபுரம், விமானங்களில் அமைக்கப்படும் படிசாரங்களின் உறுதித் தன்மையை பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். திருச்செந்தூர் ஜேஜே நகரில் இரும்பினாலான தற்காலிக பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு, திருச்செந்தூர் கோயில் தக்கார் அருள்முருகன், கோட்டாட்சியர் சுகுமாறன், கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், நகராட்சித் தலைவர் சிவ ஆனந்தி, வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வைகாசி விசாகம்: இதேபோல், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு வசதிகளை செய்வது தொடர்பாகவும் அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆலோசனைகளை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x