Published : 26 May 2025 05:15 PM
Last Updated : 26 May 2025 05:15 PM
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னீ தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மற்றும் கர்நாடகாவிலும் இருந்து பக்தர்கள் ராமேசுவரம் வரத் துவங்கினர். திங்கட்கிழமை அதிகாலை ராமநாதசுவாமி கோயிலின் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து அக்னி தீர்த்தக் கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். அதைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அமாவாசை கூட்டத்தினால் ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT