Published : 25 May 2025 06:10 AM
Last Updated : 25 May 2025 06:10 AM
மூலவர்: சகஸ்ர லட்சுமீஸ்வரர் அம்பாள்: பிரகன்நாயகி தல வரலாறு : திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக நினைத்து, அதை எடுக்க முயன்றபோது, சிவன் அவர் முன் தோன்றி தடுத்தார். இதையறிந்த லட்சுமிக்கும், சிவ தரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின் ஆலோசனைப்படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை பூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதனால் இத்தல இறைவன், சகஸ்ர லட்சுமீஸ்வரர் ஆனார் கோயில் சிறப்பு: தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கீரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ர லட்சுமீஸ்வரரை தரிசிக்க, உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து ஹோமம் செய்து சிவனை வழிபடுவதாக ஐதீகம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில், இங்கு வந்து ஹோமம் செய்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்கின்றனர். இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட செயல்பாடுகள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சம்: தீயாகிய அக்னி பகவானும், அயனாகிய சூரிய பகவானும் ஹோமம் செய்து சிவனை வழிபட்ட தலமாதலால், இவ்வூர் தீயத்தூர் ஆனது. அக்னி வழிபட்ட தலமாதலால், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. கடன் பிரச்சினை தீர, இழந்தவற்றை மீண்டும் பெற, செல்வம் செழிக்க, புத்திர பாக்கியம் கிடைக்க பிரகன்நாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அமைவிடம் : ஆவுடையார்கோவிலில் இருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. (ஆவுடையார்கோவில் -மீமிசல் சாலையில் கானூரில் இருந்து திருபுனவாசல் நோக்கி செல்லும் பாதையில் பயணம் செய்து இத்தலத்தை அடையலாம்) கோயில் திறக்கும் நேரம்: காலை 6 - 12 வரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT