Last Updated : 22 May, 2025 04:56 PM

 

Published : 22 May 2025 04:56 PM
Last Updated : 22 May 2025 04:56 PM

புகழ்பெற்ற ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்ஹா 851-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடியில் புகழ்பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851-ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா ஏப்.29-ல் புகழ்மாலை எனப்படும் மவ்லீது ஷரீப்புன் தொடங்கியது. அதனையடுத்து மே 9-ல் கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று (மே 21) மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்பட்டை ஒலிக்க, வான வேடிக்கையுடன் ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மே 22 அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5.50 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது.

தர்ஹாவை மூன்று முறை சந்தனக்கூடு வலம் வந்த பின்பு சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது. திருவிழாவை காண ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் வண்ண மின் விளக்கு அலங்காரத்தில் தர்ஹா ஜொலித்தது. சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர் என பல்வேறு மதத்தினரும் இத்திருவிழாவில் பங்கேற்றனர்.

மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏர்வாடி தர்ஹாவுக்கு இயக்கப்பட்டன. தர்ஹா வளாகத்தில் சிறப்பு மருத்துவக்குழுவினர் முகாமிட்டு சிசிச்சை அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இத்திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் சபை மற்றும் ஹக்தார்கள் செய்திருந்தனர். இதனையடுத்து மே 28-ம் தேதி மாலை 5.30 மணியளவில் கொடியிறக்கப்பட்டு, நெய் சோறு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x