Published : 13 May 2025 12:43 AM
Last Updated : 13 May 2025 12:43 AM
சுப.ஜனநாயகச் செல்வம்/ என்.சன்னாசி
சித்ரா பவுர்ணமி தினமான நேற்று காலை மதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கம் விண்ணதிர, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா முடிவுற்ற நிலையில், அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கடந்த 8-ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது.
மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக 3-ம் நாளான 10-ம் தேதி அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் மதுரைக்குப் புறப்பட்டார். மூன்றுமாவடியில் 11-ம் தேதி எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கினார். பின்னர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி அருள்பாலித்தார்.
நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன்புள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி, அங்கிருந்து தங்கக் வைகை ஆறு நோக்கிப் புறப்பட்டார். கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் வகையில், எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் வைகை ஆறு சந்திப்பு மண்டபத்துக்கு வந்தார். தொடர்ந்து, ஆழ்வார்புரம் வைகை கரைக்கு தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் நாணயங்களால் ஆன மாலைகள், வெட்டிவேர் மாலைகள் சாத்தப்பட்டன.
கள்ளழகரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வீரராகவப்பெருமாள் 3 முறை வரவேற்க, கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் 5.59 மணிக்கு எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கங்கள் எழுப்பி தரிசனம் செய்து, சர்க்கரை தீபம் ஏற்றி கள்ளழகரை வழிபட்டனர்.
வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியை கள்ளழகர் 3 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வையாழியாகி, சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளி வீரராகவப்பெருமாளுக்கு முதல் மரியாதையாக மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து, அறநிலையத் துறை மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருளினார்.
இவ்விழாவில், அமைச்சர்கள் சேகர் பாபு, பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சித்ரா, எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.
பின்னர், கள்ளழகர் வைகை ஆற்றிலிருந்து காலை 7.35 மணிக்குப் புறப்பட்டு ஆழ்வார்புரம் வழியாக ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு நடந்த தீர்த்தவாரியில் கள்ளழகர் மீது பக்தர்கள் தோல்பை துருத்தி மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிரச் செய்தனர். தொடர்ந்து, அண்ணாநகர் வழியாக மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு எழுந்தருளினார். வழியெங்கும் பல்லாயிரம் பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசித்தனர்.
சாபவிமோசனம்: கள்ளழகர் இன்று (மே 13) வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.
பச்சைப் பட்டு: ஒவ்வோர் ஆண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது எந்த வண்ணப் பட்டு கட்டி இறங்குகிறாரோ, அதற்கேற்றவாறு பலன் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேற்று கள்ளழகர் பச்சை நிறப் பட்டு உடுத்தி வந்ததால் நன்கு மழை பொழிந்து நாடு செழிப்படையும் என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT