Published : 10 May 2025 07:38 PM
Last Updated : 10 May 2025 07:38 PM

சித்திரைத் திருவிழா: தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் - மலர்தூவி வரவேற்ற பக்தர்கள்! 

மதுரை அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் மலர்தூவி வரவேற்றனர் | படங்கள்: நா.தங்கரத்தினம்

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று (மே 10) மாலை மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜபெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மலர்கள் தூவி வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் நாளை (மே 11) அதிகாலை எதிர்சேவை நடைபெறும்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான இன்று (மே 10) காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள் எழுந்தருளினார். பின்னர் மாலையில் சுந்தரராஜபெருமாள், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் கோயிலிலிருந்து மாலை 5.20 மணியளவில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டு கள்ளழகரை மலர்கள் தூவி வரவேற்று தரிசித்தனர். பின்பு கோயில் ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சந்நிதியில் தீபாராதனை முடிந்து கருப்பணசாமியின் உத்தரவு பெற்று மதுரைக்கு கள்ளழகர் மாலை 6.25 மணியளவில் புறப்பட்டார். வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்பு இரவில் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி பகுதியிலுள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் தங்கினார்.

நான்காம் நாளான நாளை (மே 11) அதிகாலை 1 மணியளவில் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளி, கடச்சனேந்தல் வழியாக மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் அதிகாலை 5.30 மணியளவில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்பர். பின்னர் புதூர், ரிசர்வ் லைன், அவுட்போஸ்ட் மற்றும் அம்பலகாரர் மண்டகப்படிகளில் எழுந்தருளி, இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருள்கிறார்.

அங்கு திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொள்கிறார். மே 12-ம் தேதி அதிகாலை கோயிலிலிருந்து புறப்பாடாகி தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் 2.30 மணியளவில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். அங்கிருந்து வைகை ஆறு நோக்கி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். வழிநெடுகிலும் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வரவேற்போடு, எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவ பெருமாளும் வெள்ளிக்குதிரை வாகனத்தில் வரவேற்க சித்திரை பவுர்ணமியன்று அதிகாலை 5.45 மணிமுதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

அப்போது வைகை ஆற்றில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி தந்துவிட்டு காலை 7.25 மணியளவில் வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றிவிட்டு அங்கிருந்து ராமராயர் மண்டகப்படிக்கு புறப்படுகிறார். அங்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்விப்பார்கள். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார். மே 13-ல் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.

மே 14-ல் ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். அங்கு மே 15-ல் அதிகாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயிலில் சந்நிதியில் வையாளியாகி மலைக்கு திரும்புகிறார். மே 16-ல் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக காலை 10 மணியளவில் கோயிலை அடைகிறார்.

மே 17-ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் ந.யக்ஞ நாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x