Published : 01 May 2025 05:31 AM
Last Updated : 01 May 2025 05:31 AM
சென்னை / காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். காஞ்சி சங்கர மடத்தில் திரளான பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வந்திருந்து இளைய பீடாதிபதியிடம் ஆசி பெற்றனர்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ரிக் வேத விற்பன்னர் பிரம்மஸ்ரீ துட்டுசத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச
சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டார். அட்சய திருதியை தினத்தில் அவர் சந்நியாஸ்ரம தீட்சை பெற உள்ளார் என்று காஞ்சி சங்கர மடத்தின் கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி முன்னதாக தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த அட்சய திருதிய நன்னாளில் (நேற்று),காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில், காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், ஸ்ரீ கணேச சர்மா திராவிட்டுக்கு சந்நியாஸ்ரம தீட்சை அருளினார்.
இதையடுத்து இளைய பீடாதிபதிக்கு ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற தீட்சா நாமம் சூட்டப்பட்டது. இந்த புனித நிகழ்ச்சி கிமு 482-ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஆதிசங்கரரின் 2,534-வது ஜெயந்தி மஹோத்ஸவத்தை (மே.2-ம் தேதி) ஒட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ கணேச சர்மா திராவிட்டுக்கு சந்நியாச தீட்சை வழங்கும் நிகழ்ச்சிக்கான பூர்வாங்கப் பணிகள், காஞ்சி காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தக் குளத்தில் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கின. சந்நியாச தீட்சை வழங்கி, தீட்சா நாமம் சூட்டப்பட்ட பின்னர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுக்கிரஹபாஷணம் வழங்கினார்.
அதில் கூறப்பட்டதாவது: புதன்கிழமை, ரோகிணி நட்சத்திரத்தில் அட்சய திருதியை அமைவது மிகவும் அபூர்வ அமைப்பாகும். அடுத்த 27 ஆண்டுகளுக்குப் பிறகே இப்படி ஓர் அமைப்பு நிகழும். காஞ்சி சங்கர மடத்தின் குரு பரம்பரையில் புதியதாக ஒரு குருநாதர் கிடைத்துள்ளார். இந்த குருநாதரை அனைவரும் வணங்கி, அவரது உபதேச மொழிகளை கேட்டு பயன்பெற வேண்டும்.
நமது பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றைக் காத்தருளும் சனாதன தர்மத்தை அனைவரும் கடைபிடித்து, சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும். பக்தியுடன் இறைவழிபாடு, குரு வழிபாடு ஆகியவை நமக்கு என்றும் துணை நிற்கும். இவ்வாறு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பிற மடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர்.ராம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளைய பீடாதிபதியும் காமாட்சி அம்பாள் சந்நிதி, ஸ்ரீ ஆதிசங்கரர் சந்நிதியில் சிறப்பு பூஜை செய்து, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பீடாதிபதிகள் இருவரும், காஞ்சி காமாட்சி அம்பாள் சந்நிதியில் இருந்து காஞ்சி சங்கர மடத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி அம்பாள் சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமி சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், இருவரும் சுரேஷ்வராச் சார்யா சந்நிதி, பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனம், பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் வழிபாடு செய்தனர்.
பிருந்தாவன அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பீடாதிபதிகள் இருவருக்கும், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாநிலங்கள் சார்பில் பிரதிநிதிகள் வந்திருந்து பீடாதிபதிகளுக்கு மரியாதை செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீ சந்திர மவுலீஸ்வர பூஜை, பிக் ஷாவந்தனம், பாத பூஜை சமர்ப்பண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 5 மணி அளவில் இளைய பீடாதிபதிகளை பக்தர்கள் தரிசித்து ஆசி பெற்றனர். இரவு 7.30 மணி அளவில் ஸ்ரீ சந்திரமவுலீஸ்வர பூஜை நடைபெற்றது.
இளைய மடாதிபதியின் பூர்வாச்ரமம்: ஆந்திர பிரதேச மாநிலம் துனி என்ற ஊரில், பிரம்மஸ்ரீ துட்டு ஸ்ரீநிவாச சூர்ய சுப்பிரமணிய தன்வந்தரி - அலிவேலு மங்காதேவி தம்பதிக்கு 2001-ம் ஆண்டு, கணேச சர்மா திராவிட் மகனாகப் பிறந்தார். பிரம்ம துட்டு ஸ்ரீநிவாச சூர்ய சுப்பிரமணிய தன்வந்தரி, அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயண சுவாமி கோயிலில் விராட புரோகிதராக பணிபுரிந்து வருகிறார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நிர்மல் மாவட்டம், பசாராவில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ சந்துகுட்லு ஹோசமனே ரத்னாகர பட் சர்மாவிடம் (ரிக்வேத சலக் ஷண கனபாடிகள்) ரிக்வேதம் பயின்ற கணேச சர்மா திராவிட், அங்கேயே வேதம் பயிற்றுவித்து வந்துள்ளார்.
தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான வேத அறிஞரான பல்லாமுடி சத்திய வெங்கட ரமணமூர்த்தியிடம் ஷப்தமஞ்சரி, தாதுரூபாவளி, சமாசகுசுமாவளி மற்றும் பிற நூல்களைப் படித்தார். அவர் ரிக்வேத அறிஞரும் சமஸ்கிருத ஆசிரியருமான ஸ்ரீ கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரின் கீழ் வேத அர்த்தத்தையும் சமஸ்கிருத கல்வியையும் தொடங்கினார், வேதப் படிப்புகள் தவிர, அன்னாவரத்தில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மே 2009-ல், கோடை விடுமுறையின்போது, அவரது தாத்தா (மறைந்த ஸ்ரீ துட்டு சுப்பிரமணியம்) கணேச சர்மாவை திருப்பதியில் உள்ள தனது தாய்மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஒருநாள் அவர்கள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசித்துள்ளனர்.
தூரத்தில் நின்று சுவாமிகளை தரிசனம் செய்தபோது, ஆச்சார்யர் அவர்களை அருகில் அழைத்து, ஆசீர்வதித்து சிறுவனாக இருந்த கணேச சர்மாவுக்கு சில வழிகாட்டுதலை வழங்கினார். அதன்படி ரத்னாகர பட்டை சந்தித்து, அவரிடம் வேத பயிற்சியைத் தொடங்கினார். உபாகர்மாவை முடித்த பிறகு, ஆசிரியர் இல்லத்திலேயே 12 ஆண்டுகள் தங்கி, குரு சேவை செய்து வந்தார். ரிக்வேத சம்ஹிதை, ஐதரேய பிரஹ்மணம், ஆரண்யகம் மற்றும் உபநிஷத்துகளை கற்றார். பின்னர் பாத மற்றும் க்ரமக் கல்வியைத் தொடர்ந்தார்.
வேதத்தில் ஆழ்ந்த ஞானம்: ரிக்வேத அறிஞரும், ஸ்ரீ ரத்னாகர பட்டின் மகனுமான ஸ்ரீநிவாச சர்மா, தனது மந்திர உச்சாடனத் திறமைக்குப் பெயர் பெற்றவர், அரசவல்லியில் உள்ள ஸ்ரீ சூர்ய நாராயணர் கோயில் பணி புரிந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து, ஸ்ரீ கணேச சர்மா, பிரதிஷாக்யம், வியாலி சிக் ஷா உள்ளிட்ட மேம்பட்ட வேத நூல்களை கற்றறிந்ததுடன், அவை தொடர்புடைய நூல்களில் பயிற்சி பெற்று, ஜடபாதத்தையும் கற்றார். சம்ஸ்கிருதம், வேத நூல்கள், வேதாந்த படிப்பு ஆகியன, ஸ்ரீ கணேச சர்மாவுக்கு வேதத்தில் ஆழ்ந்த ஞானத்தை ஏற்படுத்தின. ரிக் வேதம் தவிர யஜூர்வேதம், சாமவேதம், சதாங்கம், தஷோபநிஷத் படிப்புகளை முடித்த, ஸ்ரீ கணேச சர்மா திராவிட், தற்போது சாஸ்திரக் கல்வியை தொடர்கிறார்.
70-வது பீடாதிபதியுடன் சந்திப்பு: 2019-ல் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் முடித்த பிறகு, சென்னையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தரிசனம் ஸ்ரீ கணேச சர்மா திராவிட்டுக்கு கிடைத்தது. சுவாமிகள் மஹபூப் நகரில் முகாமிட்டிருந்தபோது, தனது வேத படிப்பு நிறைவடைந்ததையும், கோயிலில் தனது சேவையைத் தொடங்கியது பற்றியும் தெரிவித்த, ஸ்ரீ கணேச சர்மா திராவிட், அவரது கவனத்தை ஈர்த்துள்ளார். 2022-ம் ஆண்டு, காக்கிநாடாவில் நடந்த சாதுர்மாஸ்யத்தின்போது, ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பிரதிஷாக்யசதஸில் பங்கேற்றார், அங்கு அவர் மீண்டும் சுவாமிகளின் ஆசிகளைப் பெற்றார்.
2024-ம் ஆண்டு ஜனவரியில், பரமாச்சாரிய ஆராதனை உற்சவங்களின் ஒரு பகுதியாக ஸ்கந்தகிரியில் நடந்த ரிக்வேத சம்ஹிதை பாராயணத்தில் ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பங்கேற்றார், தண்டலம் (ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பூர்வாச்ரம கிராமம்), காகவாக்கம், சூலமேனி அக்ரஹாரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு அவர் யாத்திரை மேற்கொண்டார்.
அதே ஆண்டு மார்ச் மாதத்தில் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி அவர் திருப்பதியில் பத்து நாட்கள் தங்கி பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவங்களில் பங்கேற்றார். ஏப். 13-ம் தேதி காஞ்சி வந்து காமாட்சி அம்பாளை தரிசித்து, காஞ்சி பரமாச்சார்யா, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்களில் தரிசனம் செய்தார். ஏப். 14-ம் தேதி முதல், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ், ஓராண்டு காலம் வேத பயிற்சி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT