Last Updated : 01 May, 2025 05:31 AM

 

Published : 01 May 2025 05:31 AM
Last Updated : 01 May 2025 05:31 AM

காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்பு

சென்னை / காஞ்சிபுரம்: ​​காஞ்சி காமகோடி பீடத்​தின் 71-வது பீடா​திப​தி​யாக ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வ​தி சு​வாமிகள் நேற்று பொறுப்பேற்​றுக் கொண்​டார். காஞ்சி சங்கர மடத்​தில் திரளான பக்​தர்​கள் பல மாநிலங்​களில் இருந்து வந்​திருந்​து இளைய பீடா​திப​தி​யிடம் ஆசி பெற்றனர்.

காஞ்சி காமகோடி பீடத்​தின் 71-வது பீடா​திப​தி​யாக ரிக் வேத விற்​பன்​னர் பிரம்மஸ்ரீ துட்​டுசத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச
சர்​மா ​தி​ரா​விட் தேர்வு செய்​யப்​பட்​டார். அட்சய திரு​தியை தினத்​தில் அவர் சந்​நி​யாஸ்ரம தீட்சை பெற உள்​ளார் என்று காஞ்சி சங்கர மடத்​தின் கார்​யம் சல்லா விஸ்​வ​நாத சாஸ்​திரி முன்​ன​தாக தெரி​வித்​திருந்​தார்.

சந்நியாஸ்ரம தீட்சை பெற்ற பிறகு, ஸ்ரீ விஜயேந்திர
சரஸ்வதி சுவாமிகளுடன் இளைய பீடாதிபதி.

புதன்​கிழமை, ரோகிணி நட்​சத்​திரம் சேர்ந்த அட்சய திரு​திய நன்​னாளில் (நேற்​று),​காஞ்சி காமாட்சி அம்​மன் கோயி​லில் உள்​ள பஞ்ச கங்கா தீர்த்​தத்​தில், காஞ்சி காமகோடி பீடத்​தின் 70-வது பீடா​திபதி ஜகத்​குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள்​ காலை 6 மணி முதல் 7.30 மணிக்​குள், ஸ்ரீ கணேச சர்மா திரா​விட்​டுக்கு சந்​நி​யாஸ்ரம தீட்சை அருளி​னார்.

இதையடுத்து இளைய பீடா​திப​திக்கு ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி என்ற தீட்சா நாமம் சூட்​டப்​பட்​டது. இந்த புனித நிகழ்ச்சி கிமு 482-ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறு​விய ஆதிசங்​கரரின் 2,534-வது ஜெயந்தி மஹோத்​ஸவத்தை (மே.2-ம் தேதி) ஒட்டி நடை​பெறு​வது குறிப்​பிடத்​தக்​கது.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து
ஊர்வலமாகச் சென்ற பீடாதிபதிகள்.

ஸ்ரீ கணேச சர்மா திரா​விட்​டுக்கு சந்​நி​யாச தீட்சை வழங்​கும் நிகழ்ச்​சிக்​கான பூர்​வாங்​கப் பணி​கள், காஞ்சி காமாட்சி அம்​பாள் தேவஸ்​தானத்​தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்​தக் குளத்​தில் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்​கின. சந்​நி​யாச தீட்சை வழங்​கி, தீட்சா நாமம்​ சூட்​டப்​பட்ட பின்​னர் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் அனுக்​கிரஹ​பாஷணம் வழங்​கி​னார்.

அதில் கூறப்​பட்​ட​தாவது: புதன்​கிழமை, ரோகிணி நட்​சத்​திரத்​தில் அட்சய திரு​தியை அமைவது மிக​வும் அபூர்வ அமைப்​பாகும். அடுத்த 27 ஆண்​டு​களுக்​குப் பிறகே இப்​படி ஓர் அமைப்பு நிகழும். காஞ்சி சங்கர மடத்​தின் குரு பரம்​பரை​யில் புதி​ய​தாக ஒரு குரு​நாதர் கிடைத்​துள்​ளார். இந்த குரு​நாதரை அனை​வரும் வணங்கி, அவரது உபதேச மொழிகளை கேட்டு பயன்​பெற வேண்​டும்.

நமது பண்​பாடு, பாரம்​பரி​யம், கலாச்​சா​ரம் ஆகிய​வற்​றைக் காத்​தருளும் சனாதன தர்​மத்தை அனை​வரும் கடைபிடித்​து, சிறந்த வாழ்க்கை வாழ வேண்​டும். பக்​தி​யுடன் இறைவழி​பாடு, குரு வழி​பாடு ஆகியவை நமக்கு என்​றும் துணை நிற்​கும். இவ்​வாறு ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் கூறி​னார்.

இந்த நிகழ்ச்​சி​யில் பிற மடங்​களைச் சேர்ந்த பீடா​திப​தி​கள், ஆளுநர் ஆர்​.என்​.ர​வி,​ சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர்.ராம் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் மத்​திய அமைச்​சர் சுப்​பிரமணி​யம் சுவாமி ஆகியோர் பங்​கேற்​றனர்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா குளத்தில்,
ஸ்ரீ கணேச சர்மா திராவிட்டுக்கு சந்நியாஸ்ரம தீட்சை
வழங்கும் சடங்குகள் நடைபெறுகின்றன.

இந்​நிகழ்ச்​சி​யைத் தொடர்ந்​து, ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகளும், இளைய பீடா​திப​தி​யும் காமாட்சி அம்​பாள் சந்​நி​தி, ஸ்ரீ ஆதிசங்​கரர் சந்​நி​தி​யில் சிறப்பு பூஜை செய்​து, சுவாமி தரிசனம் செய்​தனர். பின்​னர் பீடா​திப​தி​கள் இரு​வரும், காஞ்சி காமாட்சி அம்​பாள் சந்​நி​தி​யில் இருந்து காஞ்சி சங்கர மடத்​துக்கு ஊர்​வல​மாக அழைத்து வரப்​பட்​டனர்.

ஸ்ரீ மஹா திரிபுர சுந்​தரி அம்​பாள் சமேத சந்​திரமவுலீஸ்வர சுவாமி சந்​நி​தி​யில் சுவாமி தரிசனம் செய்த பின்​னர், இரு​வரும் சுரேஷ்வ​ராச் சார்யா சந்​நி​தி, பூஜ்யஸ்ரீ சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் பிருந்​தாவனம், பூஜ்யஸ்ரீ ஜெயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் பிருந்​தாவனத்​தில் வழி​பாடு செய்​தனர்.

பிருந்​தாவன அரங்​கில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பீடா​திப​தி​கள் இரு​வருக்​கும், தமிழ்​நாடு, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட கோயில் பிர​சாதங்​கள் வழங்​கப்​பட்​டன. மாநிலங்​கள் சார்​பில் பிர​தி​நி​தி​கள் வந்​திருந்து பீடா​திப​தி​களுக்கு மரி​யாதை செய்​தனர்.

காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு
வெளியே வரும் பீடாதிபதிகள், பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர்.

இதைத் தொடர்ந்​து, ஸ்ரீ சந்​திர மவுலீஸ்வர பூஜை, பிக் ஷாவந்​தனம், பாத பூஜை சமர்ப்பண நிகழ்​ச்சிகள்​ நடை​பெற்​றன. ​மாலை 5 மணி அளவில்​ இளைய பீ​டா​திப​தி​களை பக்​தர்​கள்​ தரிசித்​து ஆசி பெற்​றனர்​. இரவு 7.30 மணி அளவில்​ ஸ்ரீ சந்​திரமவுலீஸ்​வர பூஜை நடை​பெற்​றது.

இளைய மடாதிபதியின் பூர்வாச்ரமம்: ஆந்திர பிரதேச மாநிலம் துனி என்ற ஊரில், பிரம்மஸ்ரீ துட்டு ஸ்ரீநிவாச சூர்ய சுப்பிரமணிய தன்வந்தரி - அலிவேலு மங்காதேவி தம்பதிக்கு 2001-ம் ஆண்டு, கணேச சர்மா திராவிட் மகனாகப் பிறந்தார். பிரம்ம துட்டு ஸ்ரீநிவாச சூர்ய சுப்பிரமணிய தன்வந்தரி, அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயண சுவாமி கோயிலில் விராட புரோகிதராக பணிபுரிந்து வருகிறார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நிர்மல் மாவட்டம், பசாராவில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ சந்துகுட்லு ஹோசமனே ரத்னாகர பட் சர்மாவிடம் (ரிக்வேத சலக் ஷண கனபாடிகள்) ரிக்வேதம் பயின்ற கணேச சர்மா திராவிட், அங்கேயே வேதம் பயிற்றுவித்து வந்துள்ளார்.

தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான வேத அறிஞரான பல்லாமுடி சத்திய வெங்கட ரமணமூர்த்தியிடம் ஷப்தமஞ்சரி, தாதுரூபாவளி, சமாசகுசுமாவளி மற்றும் பிற நூல்களைப் படித்தார். அவர் ரிக்வேத அறிஞரும் சமஸ்கிருத ஆசிரியருமான ஸ்ரீ கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரின் கீழ் வேத அர்த்தத்தையும் சமஸ்கிருத கல்வியையும் தொடங்கினார், வேதப் படிப்புகள் தவிர, அன்னாவரத்தில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மே 2009-ல், கோடை விடுமுறையின்போது, ​​அவரது தாத்தா (மறைந்த ஸ்ரீ துட்டு சுப்பிரமணியம்) கணேச சர்மாவை திருப்பதியில் உள்ள தனது தாய்மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஒருநாள் அவர்கள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசித்துள்ளனர்.

தூரத்தில் நின்று சுவாமிகளை தரிசனம் செய்தபோது, ​​ஆச்சார்யர் அவர்களை அருகில் அழைத்து, ஆசீர்வதித்து சிறுவனாக இருந்த கணேச சர்மாவுக்கு சில வழிகாட்டுதலை வழங்கினார். அதன்படி ரத்னாகர பட்டை சந்தித்து, அவரிடம் வேத பயிற்சியைத் தொடங்கினார். உபாகர்மாவை முடித்த பிறகு, ஆசிரியர் இல்லத்திலேயே 12 ஆண்டுகள் தங்கி, குரு சேவை செய்து வந்தார். ரிக்வேத சம்ஹிதை, ஐதரேய பிரஹ்மணம், ஆரண்யகம் மற்றும் உபநிஷத்துகளை கற்றார். பின்னர் பாத மற்றும் க்ரமக் கல்வியைத் தொடர்ந்தார்.

வேதத்தில் ஆழ்ந்த ஞானம்: ரிக்வேத அறிஞரும், ஸ்ரீ ரத்னாகர பட்டின் மகனுமான ஸ்ரீநிவாச சர்மா, தனது மந்திர உச்சாடனத் திறமைக்குப் பெயர் பெற்றவர், அரசவல்லியில் உள்ள ஸ்ரீ சூர்ய நாராயணர் கோயில் பணி புரிந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து, ஸ்ரீ கணேச சர்மா, பிரதிஷாக்யம், வியாலி சிக் ஷா உள்ளிட்ட மேம்பட்ட வேத நூல்களை கற்றறிந்ததுடன், அவை தொடர்புடைய நூல்களில் பயிற்சி பெற்று, ஜடபாதத்தையும் கற்றார். சம்ஸ்கிருதம், வேத நூல்கள், வேதாந்த படிப்பு ஆகியன, ஸ்ரீ கணேச சர்மாவுக்கு வேதத்தில் ஆழ்ந்த ஞானத்தை ஏற்படுத்தின. ரிக் வேதம் தவிர யஜூர்வேதம், சாமவேதம், சதாங்கம், தஷோபநிஷத் படிப்புகளை முடித்த, ஸ்ரீ கணேச சர்மா திராவிட், தற்போது சாஸ்திரக் கல்வியை தொடர்கிறார்.

70-வது பீடாதிபதியுடன் சந்திப்பு: 2019-ல் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் முடித்த பிறகு, சென்னையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தரிசனம் ஸ்ரீ கணேச சர்மா திராவிட்டுக்கு கிடைத்தது. சுவாமிகள் மஹபூப் நகரில் முகாமிட்டிருந்தபோது, தனது வேத படிப்பு நிறைவடைந்ததையும், கோயிலில் தனது சேவையைத் தொடங்கியது பற்றியும் தெரிவித்த, ஸ்ரீ கணேச சர்மா திராவிட், அவரது கவனத்தை ஈர்த்துள்ளார். 2022-ம் ஆண்டு, காக்கிநாடாவில் நடந்த சாதுர்மாஸ்யத்தின்போது, ஸ்ரீ​​ கணேச சர்மா திராவிட் பிரதிஷாக்யசதஸில் பங்கேற்றார், அங்கு அவர் மீண்டும் சுவாமிகளின் ஆசிகளைப் பெற்றார்.

2024-ம் ஆண்டு ஜனவரியில், பரமாச்சாரிய ஆராதனை உற்சவங்களின் ஒரு பகுதியாக ஸ்கந்தகிரியில் நடந்த ரிக்வேத சம்ஹிதை பாராயணத்தில் ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பங்கேற்றார், தண்டலம் (ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பூர்வாச்ரம கிராமம்), காகவாக்கம், சூலமேனி அக்ரஹாரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு அவர் யாத்திரை மேற்கொண்டார்.

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு விழாவுக்கு வருகை
புரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி,
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
| படங்கள்: எம்.முத்துகணேஷ் |

அதே ஆண்டு மார்ச் மாதத்தில் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி அவர் திருப்பதியில் பத்து நாட்கள் தங்கி பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவங்களில் பங்கேற்றார். ஏப். 13-ம் தேதி காஞ்சி வந்து காமாட்சி அம்பாளை தரிசித்து, காஞ்சி பரமாச்சார்யா, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்களில் தரிசனம் செய்தார். ஏப். 14-ம் தேதி முதல், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ், ஓராண்டு காலம் வேத பயிற்சி பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x