Published : 27 Apr 2025 07:25 AM
Last Updated : 27 Apr 2025 07:25 AM
மூலவர்: மன ஆலய ஈஸ்வரர் அம்பாள்: மரகதாம்பிகை தல வரலாறு: திருநின்றவூரில் பிறந்த பூசலார், அங்குள்ள சிவலிங்கத்தை தினமும் தரிசித்து வந்தார். அந்தலிங்கம் மேற்கூரை இல்லாமல் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப் பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது. தன்னிடம் பொருள்ஏதும் இல்லாததால், தன் மனதுக்குள் கோயிலை கட்டினார்.அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு உண்மையான கோயிலை கட்டிக் கொண்டிருந்தான். இருவரும் ஒரே நேரத்தில் கோயிலை கட்டி முடித்து, ஒரே நாளில்கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்துவிட்டதால், மற்றொரு நாள் காஞ்சிபுரம் கோயில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள்ளும்படி கூறினார்.
மன்னனும் அதையேற்று, திருநின்றவூர் சென்று பூசலாரைசந்தித்து தான் குடமுழுக்கு நடைபெற உள்ள கோயிலைக் காண வந்துள்ளதாகத் தெரிவித்தார். நடந்த விஷயத்தை பூசலார் கூறியதும், அன்பால் மனதில் கட்டும் கோயிலுக்கும், மிகுந்த பொருட்செலவு செய்து கட்டப்படும் கோயிலுக்கும் உள்ள வேறுபாட்டை மன்னன் அறிந்து கொண்டான். குறிப்பிட்ட நாளில் பூசலார் எழுப்பிய மனக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளினார். பூசலாரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மன்னன் இத்தலத்தில் நிஜக்கோயில் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அதற்கு இருதயாலீஸ்வரர் என்று
திருநாமம் சூட்டினான்.
சிறப்பு அம்சம்: சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கஜபிருஷ்ட அமைப்பில் தூங்கானை மாட வடிவில் சுவாமியின் விமானம் அமைந்துள்ளது. சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் சிலை இருப்பது தனி சிறப்பு. இதயநோய் குணமாகதிங்கட்கிழமைகளில் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அமைவிடம்: சென்னையிலிருந்து 33 கிமீ தூரத்தில் திருவள்ளூர் செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30-12.30, மாலை 4.30-8.30 வரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT