Published : 24 Apr 2025 05:25 AM
Last Updated : 24 Apr 2025 05:25 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் கோயில் சித்திரைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி, கொடிமரம் முன்பு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் உட்பட பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மாவட்ட நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், கோயில் கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்தியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இன்று முதல் மே 10-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடைபெறும்.
பிரதான நிகழ்ச்சி எண் திசை கொடியேற்றம் மே 1-ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் காலை 11.45 மணிக்குள் நடைபெறும். மே 2-ம் தேதி சந்திரசேகரர் முத்து பல்லக்கில் புறப்பாடு, மே 7-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளல், அன்று காலை 5.30 மணிக்கு மேல் காலை 6.30 மணிக்குள் தேரோட்டம், மே 10-ம் தேதி நடராஜர் நான்கு வீதி புறப்பாடு மற்றும் சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT