Published : 14 Apr 2025 09:02 AM
Last Updated : 14 Apr 2025 09:02 AM

திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம்!

படம்:எஸ்.சத்தியசீலன்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை கருட சேவை, ஏப்ரல் 19ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் பார்த்த சாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில், இந்த ஆண்டு பார்த்த சாரதி பெருமாள் பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7.45 மணி அளவில் புன்னை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை ஏப்ரல் 15ம் தேதி (நாளை) அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு ஏகாந்த சேவை, 16ம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை நடைபெறுகிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் 19ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

பிரம்மோற்சவ நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 22ம் தேதி சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x