Published : 13 Apr 2025 12:06 AM
Last Updated : 13 Apr 2025 12:06 AM
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா ஏப்.3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் ரங்கநாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார்.
தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம்(கோரதம்) நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நம்பெருமாள் காலை 8 மணிக்கு தாயார் சந்நிதியில் இருந்து கோ ரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்துக்கு புறப்பட்டார். அங்கு காலை 8.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர், காலை 9.40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்த தேர், மதியம் 12.30 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர், தேரின் முன்பு பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
தேர்த் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில், இன்று(ஏப்.13) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அத்துடன் பங்குனி தேர்த் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT