Published : 10 Apr 2025 12:58 PM
Last Updated : 10 Apr 2025 12:58 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை (ஏப்ரல் 11) மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி பாவை நோன்பு இருந்து பங்குனி உத்திரம் நாளில் ஶ்ரீரெங்கம் ரெங்கமன்னாரை மணம் புரிந்தார் என்பது கோயில் வரலாறு. ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் நாளில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் கருட சேவை, கோவர்த்தனகிரி கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு உற்சவம் நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை(ஏப்ரல் 10) காலை 7.05 மணிக்கு செப்புத் தேரோட்டம் நடைபெறுகிறது.
மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் ஆகியோர் திருக்கல்யாண திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT