Last Updated : 14 Mar, 2025 11:12 AM

 

Published : 14 Mar 2025 11:12 AM
Last Updated : 14 Mar 2025 11:12 AM

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்: பக்தர்கள் புனித நீராடல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் மாசிமக உற்சவமாக நடைபெற்ற தீர்த்தவாரியில், சக்கரத்தாழ்வாருடன் கடலில் இறங்கி பெண்கள் மற்றும் பக்தர்கள் புனித நீராடினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் திருகடல்மல்லை எனப்படும் தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசிமக உற்சவமாக இன்று கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காலை 8 மணிக்கு உற்சவர் தலசயன பெருமாள் மற்றும் ஆதிவராஹ பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனங்களின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும், நான்கு ராஜவீதிகளில் வீதியுலா வந்து கடற்கரையில் எழுந்தருளினர்.

பின்னர், தீர்த்தவாரி நிகழ்ச்சியாக சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களுடன் சக்கரத்தாழ்வார் கடலில் இறங்கினார். அப்போது, சுவாமியுடன் சேர்ந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் மஞ்சள் பூசி கடலில் இறங்கி புனித நீராடினர். தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னர், தலசயன பெருமாள், ஆதிவராஹ பெருமாள் ஆகிய சுவாமிகள் கோயில்களுக்கு ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில் காலை மற்றும் பிற்பகலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் செல்வக்குமார் தலைமையில் மேலாளர் சந்தானம் உள்ளிட்ட பணியாளர்கள் மேற்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x