Published : 05 Mar 2025 06:30 AM
Last Updated : 05 Mar 2025 06:30 AM
சென்னை: கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலியும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.
யேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.
ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மீன், இறைச்சி, முட்டை முதலான அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவர்.
அதுமட்டுமின்றி, வீடுகளில், திருமணம், பிறந்தநாள், புதுமனை புகுவிழா போன்ற எந்த விதமான கொண்டாட்ட நிகழ்வுகளும் இருக்காது. தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, கஷ்டப்படும் மக்களுக்கு பணி, பொருள் உதவிகள் செய்வது, அவர்களுக்கு ஆறுதல் சொல்வது போன்ற நற்செயல்களிலும் ஈடுபடுவர்.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்.20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. எனவே, அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படும். அந்த வகையில், கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று தொடங்குகிறது.
இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனையும் நடைபெறும். இந்த வழிபாட்டின்போது, கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை பாதிரியார்கள் 'மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய், மறவாதே' என்று சொல்லியவாறு இறைமக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் இடுவர். சாம்பல் புதன்கிழமையொட்டி சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் எஸ்.ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT