Published : 03 Mar 2025 01:36 PM
Last Updated : 03 Mar 2025 01:36 PM
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் இன்று (மார்ச் 3) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான மாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்வில், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று தொடங்கியுள்ள மாசி பிரம்மோற்சவ விழா வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நாள் தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் சிம்ம வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், வெள்ளி மயில் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
விழாவின் முக்கிய திருவிழாக்களான தேர்த் திருவிழா வரும் 9- ம் தேதியும், பாரிவேட்டை மற்றும் வள்ளி திருக்கல்யாணம் ஆகியவை வரும் 10-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT