Published : 12 Feb 2025 06:51 AM
Last Updated : 12 Feb 2025 06:51 AM

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்; பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

சென்னை: தைப்​பூசத் திரு​விழாவையொட்டி சென்னை வடபழனி, கந்தகோட்​டம், அயப்​பாக்கம் உள்ளிட்ட முருகன் கோயில்​களில் ஏராளமான பக்தர்கள் பால்​குடம், காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும் நேர்த்திக்​கடன் செலுத்​தினர். முருகப் பெரு​மானுக்கு உகந்த நாளான தைப்​பூசத் திரு​விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்டி அனைத்து முருகன் கோயில்​களி​லும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வடபழனி கோயி​லில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்​கப்​பட்டு, திருப்​பள்ளி யெழுச்சி நடைபெற்​றது. தொடர்ந்து பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்​கடன் செலுத்​தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெரு​மானுக்கு அபிஷேகம் நடைபெற்​றது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும் தங்களது நேர்த்திக்​கடனை நிறைவேற்றினர்.

தொடர்ந்து முரு​க​னுக்கு ராஜ அலங்​காரம், விபூதி அலங்​காரம் போன்ற சிறப்பு அலங்​காரங்கள் செய்​யப்​பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்​கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை​யில் நின்று பரவசத்​துடன் ‘அரோகரா’ கோஷத்தை எழுப்பி முருகனை வழிபட்​டனர். தைப்​பூசத் திரு​விழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயி​லில் பலத்த பாது​காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை
முன்னிட்டு நேற்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து
நீண்ட வரிசைகளில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நேர்த்திக்​கடன் செலுத்​தும் பக்தர்​கள், முதி​யோர், கர்ப்​பிணி​கள், கைக்​குழந்தை​களுடன் வந்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாக​வும், பால் குடம் எடுத்து வந்தவர்​கள், பொது தரிசனத்​துக்கு வந்தவர்கள் தெற்கு கோபுரம் வழியாக​வும் அனும​திக்​கப்​பட்​டனர். இரவு 8.30 மணி அளவில் வடபழனி ஆண்டவர் மயில் வாகனத்​தில் 4 மாட வீதி​களில் வலம் வந்து பக்தர்​களுக்கு அருள்​பாலித்​தார். இதனால் வடபழனி​யில் இரவு 10 மணி வரை பக்தர்கள் கூட்டம் காணப்​பட்​டது.

அதேபோல பாரி​முனை கந்தகோட்டம் முத்​துக்​குமார சுவாமி கோயி​லிலும் பக்தர்​களின் கூட்டம் அலைமோ​தி​யது. ஒரு மணி நேரத்​துக்கு மேலாக நீண்ட வரிசை​யில் காத்​திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்​தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மயில் வாகனத்​தில் வீதி உலா புறப்​பாடு நடைபெற்​றது. தைப்​பூசத்​தையொட்டி சென்னை அயப்​பாக்​கத்​தில் உள்ள சுப்​பிரமணி​ய சுவாமி கோயி​லில் 2,000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்​கடனை செலுத்​தினர்.

மஞ்சள் நிற புடவை​யில் 2,000 பெண்கள் பால் குடத்​துடன் ஊர்வலமாக சென்று வழிபாடு மேற்​கொண்​டனர். பெசன்ட்​நகர் அறுபடை வீடு முருகன் கோயிலுக்​கும் காவடி, பால்​குடம் எடுத்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதேபோல் கொளத்​தூர் குமரன் நகர்  பாலமுருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்​களி​லும் சிறப்பு வழிபாடு​கள், சுவாமி வீதி உலா நிகழ்ச்​சிகள் நடைபெற்றன.

கடந்த ஆண்டை காட்​டிலும் இந்த ஆண்டு சென்னை வடபழனி, கந்தகோட்​டம், அயப்​பாக்​கம், பென்​சட்​நகர் முருகன் கோயில்​களில் தைப்​பூசத்​தை யொட்டி கூட்டம் அதிகரித்து இருந்தது குறிப்​பிடத்​தக்​கது. இதனால் அப்பகு​தி​யில் போக்கு​வரத்து நெரிசலும் பெரிதள​வில் காணப்​பட்​டது.

இதற்​கிடையே வள்ளலாரின் ஜோதி​மயமான நாளை முன்னிட்டு தைப்​பூசத் திருநாளில் சென்னை ஏழு கிணறு பகுதி​யில் உள்ள வள்ளலார் வசித்த இல்லத்​தில், சிறப்பு வழிபாடு நடைபெற்​றது. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்சர் பி.கே.சேகர்​பாபு வள்ளலார் இல்லத்​தில் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்து, திரு​வருட்பா ஆறாம் திரு​முறை பாராயணம் நிகழ்ச்​சி​யில் பங்கேற்று அன்ன​தானத்தை தொடங்கி வைத்​தார்.

தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில்
அலகு குத்தியும் பால்குடம் ஏந்தியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.| படங்கள்: ம.பிரபு |

செங்​கல்​பட்டு: திருப்​போரூர் கந்தசுவாமி கோயி​லில் பக்தர்கள் அதிகாலை முதலே சரவண பொய்​கை​யில் நீராடி, முடி​காணிக்கை செலுத்​தினர். பால்​குடம் மற்றும் புஷ்ப காவடி, பன்னீர் காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும், துலாபாரம் செலுத்​தினர். மேலும், தங்க கொடி மரம் அருகே நெய் விளக்கு ஏற்றி தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

பலமணி நேரம் காத்​திருத்து சுவாமி தரிசனம் செய்​தனர். திருப்​போரூர் முழு​வதுமே பக்தர்கள் கூட்​டத்​தால் நிரம்பி வழிந்​தது. வேம்​புடி விநாயகர் கோயி​லில் இருந்து 1,500-க்​கும் மேற்​பட்ட பக்தர்கள் தலையில் பால்​குடம் சுமந்து முக்கிய சாலைகளில் ஊர்வலமாக வந்து, கந்தசுவாமி கோயி​லில் முரு​கப்​பெரு​மானுக்கு பாலாபிஷேகம் செய்​தனர். இரவு சரவண பொய்கை குளத்​தில் தெப்பல் உற்சவம் நடைபெற்​றது.

தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் அலகு குத்தியும்
பால்குடம் ஏந்தியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். | படங்கள்: ம.பிரபு |

காஞ்​சிபுரம்: குன்​றத்​தூரில் அமைந்​துள்ள பிரசித்தி பெற்ற சுப்​பிரமணிய சுவாமி திருக்​கோ​யிலுக்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோ​தி​யது. மேலும், அதிகாலை​யில் சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்டு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனும​திக்​கப்​பட்​டனர். காலை 4 மணி முதலே கூட்டம் வர தொடங்​கியது. இதையடுத்து, மலை குன்​றின் மீது அமைந்​துள்ள முருகன் கோயி​லில் படிக்​கட்டு தொடங்கி, சுமார் 2 கி.மீ., தூரத்​துக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரிசை​யில் காத்​திருந்​தனர். காஞ்​சிபுரம் நகரில் அமைந்​துள்ள குமரகோட்டம் கோயி​லிலும் பக்தர்கள் நீண்ட வரிசை​யில் நின்று சுவாமி தரிசனம் செய்​தனர்.

குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2 கி.மீ. தூரம் வரை பக்தர்கள்
​​​​​நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
(உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

திரு​வள்​ளூர்: முரு​க​னின் அறுபடை வீடு​களில் ஒன்றாக விளங்​கும் திருத்​தணி​யில் உள்ள சுப்​பிரமணி​யசுவாமி கோயி​லில், தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணியள​வில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்​தப்​பட்​டது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்​கப்​பட்டு தீபாராதனை நடைபெற்​றது. இதையடுத்து, காவடி மண்டபத்​தில் உற்சவர் முரு​க​னுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்​ட​வை​யால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்​காரம் நடைபெற்​றது.

சுமார் ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்ட பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர். ஏராளமான பக்தர்கள் பாத யாத்​திரை​யாக​வும் காவடி சுமந்​தும் வந்தனர்.

சன்மார்க்க நீதிக் கொடி: வள்ளலாரின் தாயார் சின்னம்​மை​யார் பிறந்த ஊரான, பொன்னேரி அருகே உள்ள சின்ன காவனத்​தில் உள்ள சின்னம்​மை​யார் இல்லத்​தில் தைப்பூச விழா நடைபெற்​றது. இதில், வள்ளலார் தாயார் சின்னம்​மை​யார் அறக்​கட்டளை சார்​பில் அருட்​பெருஞ்​ஜோதி அகவல், சன்மார்க்க நீதிக் கொடி உயர்த்​துதல், அன்ன​தானம் உள்ளிட்ட நிகழ்ச்​சிகள் நடந்தன.

செங்​கல்​பட்டு மாவட்​டம், அச்சிறுப்​பாக்கம் அடுத்த கடமலைபுத்​தூர் பகுதி​யில் சுத்த சன்மார்க்க சங்க வள்ளலார் கோயி​லில் நடைபெற்ற 11-ம் ஆண்டு தைப்பூச விழா​வில் ஆயிரக்​கணக்கான பக்தர்​கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும்அன்ன​தானம் வழங்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x