Published : 11 Feb 2025 01:20 PM
Last Updated : 11 Feb 2025 01:20 PM
ஈரோடு: பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க, சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம், விமரிசையாக இன்று (பிப்.11) நடந்தது.
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய பெருமைக்குரிய சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா, கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, பஞ்ச மூர்த்தி புறப்பாடு வெள்ளி மயில் வாகன காட்சி, யானை வாகன காட்சி ஆகிய நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன. இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 9-ம் தேதி மாலையில் கைலயங்கிரி வாகன காட்சியும், இரவு காமதேனு வாகன காட்சியும் நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவம் : நேற்று (பிப்.10) மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு வசந்த திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தைப்பூசத் தேரோட்டம் இன்று (11-ம் தேதி) காலை நடந்தது.
முன்னதாக, அதிகாலையில் கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு, சுவாமிகள் சப்பரத்தில் தேர் நிலைக்கு எடுத்து வரப்பட்டனர். அங்கு தேரை 3 முறை வலம் வந்த பின்பு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளினர். தேருக்கு கற்பூரம் காட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு காலை 6 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது.
அரோகரா கோஷம் : ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் வடம் பிடித்து, பக்தர்களால் இழுத்து வரப்பட்டு, தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு தைப்பூச இசை விழா குழு மற்றும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மகா தரிசனம்: பின்னர் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது. வருகிற 15-ந் தேதி இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ரா.சுகுமார், கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கண்காணிப்பாளர் சி.மாணிக்கம் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT