Published : 11 Feb 2025 12:12 PM
Last Updated : 11 Feb 2025 12:12 PM
கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தென்பழநி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 2-ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
விழாவின் 7-ம் நாளான கடந்த 8-ம் தேதி மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிவப்பு மலர் சூடி சிவன் அம்சமாக (ருத்திரர்) வீதியுலாவும், இரவு 12 மணிக்கு மேல் வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாக வீதியுலாவும் நடந்தது. 9-ம் தேதி அதிகாலை 7 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை மலர்கள் சூடி திருமால் அம்சமாக வள்ளி, தெய்வானையுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தார். இதனால், கோயில் நடை இரவு முழுவதும் அடைக்கப்படவில்லை.
தைப்பூச திருவிழாவில் இன்று (11-ம் தேதி) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு போய் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கால சந்தி பூஜை, விளா பூஜை, சுப்பிரமணிய பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு கோ ரதத்தில் விநாயகர் பெருமானும், சட்ட ரதத்தில் சுவாமி கழுகாசலமூர்த்தி, வள்ளி. தெய்வானை அம்மன்களுடன் எழுந்தருளினர்.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் கோயிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் விருதுநகர், சிவகாசி, மதுரை, ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கழுகாசல மூர்த்தி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT