Published : 11 Feb 2025 11:15 AM
Last Updated : 11 Feb 2025 11:15 AM
திருத்தணி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணியில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று (பிப்.11) அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தங்க கவசம், வைரகிரீடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணியளவில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அதிகாலை முதல் தமிழக பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், ஆந்திர பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து, நீண்ட வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக திருத்தணிக்கு வந்து, இன்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். இதில், பலர் மலர் காவடி, மயில் மற்றும் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை சுமந்து வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், பக்தர்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் திருத்தணி முருகன் கோயில் மலை பாதை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT