Last Updated : 05 Feb, 2025 01:32 PM

 

Published : 05 Feb 2025 01:32 PM
Last Updated : 05 Feb 2025 01:32 PM

பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.11-ல் தேரோட்டம்

பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது | படங்கள்: நா.தங்கரத்தினம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (பிப்.5) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்.11-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா புதன்கிழமை (பிப்.5) காலை 10.50 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, சுவாமி, கொடிமரம் மற்றும் கொடி ஆகியவற்றுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வேல், மயில், சேவல் இடம் பெற்ற கொடியேற்றப்பட்டது.

கொடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பிரமணியன், அறங்காவலர்கள் சுப்பிரமணியம், தனசேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில்,ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்ளுக்கு காட்சியளிப்பார்.

விழாவின் 6-ம் நாளான பிப்.10-ம்தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.11-ம் தேதி தைப்பூசத்தன்று காலை 5 மணிக்கு மேல் சண்முகநதிக்கு எழுந்தருளல், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றம், மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது.

நான்கு ரத வீதிகளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பிப்.14-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் நடைபெறும்.அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடிஇறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.

2 லட்சம் பேருக்கு அன்னதானம்: தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேஸ்வதானம் சார்பில் இன்று (பிப்.5) முதல் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவின் போது 10 நாட்களும் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ரூ.1.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (பிப்.5) காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது . ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே உள்ள காவடி மண்டபத்தில் தினமும் 14,000 பேருக்கும், பழநி அருகேயுள்ள கொங்கூர் பக்தர்கள் ஓய்வு கூடத்தில் தினமும் 6,000 பேருக்கும் என மொத்தம் 20,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் 10,000 பக்தர்கள் வீதம் 10 நாட்களும் சேர்த்து 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x