Published : 27 Apr 2024 06:20 AM
Last Updated : 27 Apr 2024 06:20 AM

40 லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் தந்து விட்டு மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்!

மதுரை: மதுரையில் 5 நாட்கள் நடந்த சித்திரை திருவிழாவில் அழகர்கோவி லிலிருந்து வண்டியூர் வரை 40 கி.மீ. பக்தி உலா வந்த அழகரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்து உள்ளனர்.

ஏப்.19-ல் தொடங்கிய மதுரை சித்திரை திருவிழாவில் முதல் 2 நாட்கள் சுந்தர்ராஜப் பெருமாள் தோளுக்கினியான் திருக்கோலத்தில் அழகர் கோயில் வளாத்தில் உலா வந்தார். ஏப்.21-ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.

18-ம் படி கருப்பண்ண சுவாமியிடம் உத்தரவு பெற்று புறப்பட்ட கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்தனர். பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக விடிய விடிய பயணித்து ஏப்.22 காலை 6 மணியளவில் மூன்று மாவடி வந்தடைந்தார்.

அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கள்ளழகரை எதிர் கொண்டு அழைக்கும் எதிர் சேவை நடந்தது. தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்த ருளியபடி மாலை அவுட்போஸ்ட் அம்பலகாரர் மண்டபகப்படியை வந் தடைந்தார்.

பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்குப் பின் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கோயிலை வலம் வந்தார்.

ஏப்.23-ம் தேதி அதிகாலை வைகை ஆற்றை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். பக்தர்கள் வெள்ளத்தில் வைகை ஆற்றங்கரைக்கு தங்கக் குதிரை வாகனத்தில் சென்ற கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இந்நிகழ்வை காண 10 லட்சம் பக்தர்கள் திரண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டபம் முன் நடந்த தீர்த்தவாரியில் பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் வண்டியூர் வீரராகவ பெரு மாள் கோயில் சென்றடைந்தார். மறுநாள் சேஷ வாகனத்தில் காட்சி தந்தார். அதன்பின் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்தார். அன்று இரவு தசாவதார கோலத்தில் எழுந்தருளினார்.

ஏப்.25-ல் ராஜாங்க திருக் கோலத்தில் தமுக்கம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்தடைந்தார். ஏப்.26 அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு மூன்று மாவடி வந்தடைந்தார். அங்கு மதுரை மக்கள் திரளாக கூடி மலைக்குப் புறப்பட்ட கள்ளழகரை வழியனுப்பினர். கடச்சனேந்தல், கள்ளந்திரி வழியாக இரவு முழுக்க பயணித்த கள்ளழகர் இன்று காலை 11 மணியளவில் இருப்பிடம் சேர்வதுடன் விழா நிறைவடைகிறது. அழகர்கோவில் முதல் வண்டியூர் வரை 40 கி.மீ. தொலைவு, 480 மண்டகப்படிகளில் எழுந்தருளி 5 நாட்கள் வீதி வலம் வந்தார். பகல், இரவு என ஓய்வின்றி இந்நிகழ்வு நடைபெற்றது.

வைகைக்கு வரும் வரை சுமார் 10 லட்சம் பேர், வைகையில் எழுந்தருளும்போது 10 லட்சம் பேர், வண்டியூர், தேனூர் மண்டபம், தசாவதாரம் முடிந்து மீண்டும் கோரிப்பாளையம் வரும் வரை 10 லட்சம் பேர், பூப் பல்லக்கு முதல் இருப்பிடம் சேர்தல் வரை 10 லட்சம் பேர் என 40 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர் என காவல்துறை, கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கிடப்பட்டுள்ளது.

சாதி,மதம், ஏழை, செல்வந்தர், நகரம், கிராமம் என எவ்வித பாகுபாட்டுக்கும் இடம் தராத விழா இது. பக்தர்களிடம் உற்சாகம், நம்பிக்கை, நல்லெண்ணம், எதிர்பார்ப்புகள் என நேர்மறையான விஷயங்களை அழகர் ஆழமாக பதிவு செய்து திரும்பியுள்ளது விழாவின் சிறப்பு.

இவ்வளவு பெரிய பக்தி வீதி உலா வேறெங்கும் இல்லாத சிறப்பாகும். 5000 போலீஸார், பல நூறு கோயில் ஊழியர்கள், தீயணைப்பு, மருத்துவம், மாநகராட்சி என பல்வேறு துறை அலுவலர்கள், 5 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இவ்விழா சிறப்பாக நடைபெற உழைத்துள்ளனர்.

சித்திரை திருவிழாவுக்காக மேளம், கொட்டகை, அன்னதானம், அழகர்வேடம், நேர்த்திக்கடன், ஒலி பெருக்கி, மின்விளக்கு, மண்டகப்படி தயார்படுத்துதல், குழந்தைகள் விளை யாட்டு பொருட்கள் என ஒவ்வொரு ஏற்பாட்டின் பின்னணியிலும் பல்லா யிரம் பேருக்கு வேலை, ஊதியம் கிடைத்துள்ளது. இதில் கூலி தொழிலாளர்கள் முதல் செல்வந்தர் வரை அழகரால் ஆண்டுதோறும் பலனடைவதும் மற்றொரு சிறப்பம்சம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x