Published : 26 Apr 2024 04:14 AM
Last Updated : 26 Apr 2024 04:14 AM

மதுரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் - கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்

முத்தங்கி சேவையில் அருள்பாலித்த கள்ளழகர்.

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19-ல் தொடங்கியது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க சுந்தர ராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் ஏப்.21-ல் அழகர்மலையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார். ஏப்.22-ல் மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. ஏப்.23-ம் தேதி அதிகாலை 6.02 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர், ஏப்.24-ம் தேதி தேனூர் மண்டபத்தின் முன் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து அன்று இரவு 12 மணி முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண அவதாரங்களிலும், முத்தங்கி சேவை அலங்காரத்திலும் கள்ளழகர் அருள்பாலித்தார். நேற்று காலை 6 மணியளவில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர் கள் விடிய விடிய கண்விழித்து தரிசனம் செய்தனர். நேற்று பிற்பகல் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் வழிநெடுகிலும் உள்ள மண்டபகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார்.

மதுரை ராமராயர் மண்டபத்தில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில் மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண, மோகினி அவதாரங்களில் எழுந்தருளிய கள்ளழகர். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மாலை 5.30 மணியளவில் ஆழ்வார்புரம் சடாரி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் தல்லாகுளத்திலுள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இரவு 11 மணிக்கு கள்ளழகர் எழுந் தருளினார். ஏப். 26 அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி மீண்டும் மலைக்கு புறப்பட்டார். ஏப்.27-ம் தேதி காலை அழகர்கோவில் இருப்பிடம் சேர்கிறார். ஏப்.28-ம் தேதி உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x