Last Updated : 23 Aug, 2014 05:21 PM

 

Published : 23 Aug 2014 05:21 PM
Last Updated : 23 Aug 2014 05:21 PM

தன் ஒரு கையை இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வென்ற சாம் காவ்தோர்ன்

மகிழ்ச்சி என்பது வெற்றி அடைவதில்தான் உள்ளது என்று நாம் பொதுவான ஒரு கருத்தை வைத்திருக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. நாம் மகிழ்ச்சியாக இருப்பதுதான் நம் வெற்றி என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊக்கமளிக்கும் பேச்சாளரான (Motivational Speaker) சாம் காவ்தோர்ன். (Sam Cawthorn)

இத்தத்துவத்தை உணர்ந்த அளவுக்கு சாமின் வாழ்வில் என்ன நடந்தது?

கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த கோர விபத்தில், இவர் தனது ஒரு கையை இழந்தார். அதுமட்டும் அல்லாமல், அவரது ஒரு காலும் செயலிழந்தது. ஆயினும், தனது வாழ்வில் உடைந்துபோன தருணங்களைச் சேகரித்துச் செதுக்கிய சாம், மற்றவர்கள் தங்களது லட்சியத்தை அடைவதற்குத் தனது ஊக்கமூட்டும் பேச்சால் உதவிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பவுன்ஸ் ஃபார்வர்ட்’ (Bounce Forward) என்ற தன்னம்பிக்கைப் புத்தகத்தை எழுதிய இவர், தான் ஊக்கமூட்டும் பேச்சாளர் ஆனதைப் பற்றிக் கூறுகிறார்.

“நான் இயல்பாகவே தன்முனைப்புடன் செயல்படுபவன். ஆனால், வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டேன். அந்த விபத்தில் நான் ஒரு கையை இழந்தேன்; ஒரு கால் செயலிழந்தது. அப்போது, நான் என் வாழ்வை மறுபரிசீலனை செய்தேன்.

மேலும், என் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது என் சகோதரரின் இறப்பு. அப்போதுதான், நான் என் சோர்வில் இருந்து விழித்து எழுந்தேன். நான் என் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று முடிவேடுத்தேன்”, என்று தெரிவிக்கிறார். அதன்பின், இவர் உலகம் முழுவதும் பயணம் செய்து, எந்தவொரு சூழ்நிலையையும் நம்மால் சமாளிக்க முடியும் என நம்பிக்கை அளிக்கும் சொற்பொழிவுகளை வழங்கி வருகிறார்.

ஊக்கமூட்டும் பேச்சாளர்கள் ஏன் தேவை?

இன்றைய உலகிற்கு ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள் ஏன் தேவைப்படுகின்றனர்? தற்போதுள்ள சூழலில் மக்களிடையே தன்னம்பிக்கை குறைந்துவிட்டதா அல்லது அவர்கள் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறார்களா?

சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஜி.ஆர்.டி மேலாண்மை பல்கலைகழகத்திற்குப் பேச வந்த சாம், இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தார்.

“நம்மில் பலருக்கு நமது மனோபலத்தை தட்டிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. நமக்கு வழிகாட்டி தேவைப்படுகிறார். நம் வாழ்வில் அப்படி ஒருவர் இருப்பது நல்லதுதான். ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்பவர்களுக்கே பயிற்சியாளர் தேவைப்படுகிறார். ஆகையால், உங்கள் வாழ்க்கையைப் பற்றி கருத்துச் சொல்வதற்கும், உத்வேகம் அளிப்பதற்கும் நம்பிக்கையான ஒருவர் இருப்பதில் தவறு ஒன்றுமில்லை”, என்று கூறுகிறார் சாம்.

'வாழ்க்கையைப் பரந்த மனதுடன் எதிர்கொள்ளுங்கள்'

மேலும், அவர் தெரிவிக்கையில், “நமது கடந்த காலத்தை வைத்து வருங்காலத்தை வடிவமைப்பது அவசியம்தான். ஆனால், கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவே அது இருக்கக்கூடாது. வாழ்க்கை உங்களுக்கு அளிப்பதைப் பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் நினைத்த இடத்தை அடைவதை நோக்கி வேலை செய்யுங்கள்.

இன்றைய காலகட்டத்தில், தங்களது எதிர்காலத்தைத் திட்டமிடுபவர்களை விடவும் தாங்கள் செல்லவிருக்கும் சுற்றுலா பற்றித் திட்டமிடுபவர்கள்தான் அதிகம்", என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

சாமிடம் பேசும் எவரும், அவருக்கு நேர்ந்த அந்தக் கொடூர விபத்தைப் பற்றியும், அதன்பின் அவரது வாழ்க்கை மாறியதைப் பற்றியும் கேட்காமல் இருக்க இயலாது.

அந்தச் சம்பவம் தொடர்பாக, அவர் பேசுகையில், “நான் வலது கை பழக்கமுள்ளவன். இந்த விபத்தில் எனது வலது கையை இழந்தபோது, நான் இடது கையில் எழுதப் பழகிக்கொண்டேன். நான் இனி நடக்கவோ, நீச்சல் அடிக்கவோ முடியாது என்று கூறியிருந்தனர். ஆனால், இன்று நான் இரண்டையும் செய்கிறேன்.

என்னால் ஒரு சில செயல்களை முன்பு போல் செய்ய முடியவில்லை. உதாரணமாக, நான் என் மூன்று குழந்தைகளையும் தூக்க முடிவதில்லை. என்னால் ஓடவோ, குதிக்கவோ முடியாது. இவை என்னைச் சிரமப்படுத்துகிறது என்றாலும், நான் என் வாழ்வை நேர்மறையான சிந்தனையுடனே எதிர்நோக்குகிறேன். என்னால் என்ன முடியாது என்பதை விடவும் என்ன முடியும் என்பதன் மீதே கவனம் செலுத்தவது தான் என் வாழ்க்கை தத்துவம்", என்று உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்.

இந்த மனோபலம்தான், இவரை ஒரே கையால் கிட்டார் (Guitar) வாசிக்கச் செய்திருக்கிறது. சிறந்த இசை கலைஞனான இவர், அவ்வபோது தனது மனைவி கேட்டிற்கு தன் இனிமையான இசையை வாசித்து காட்டுவதுண்டு. இனியும், தனது தன்னபிக்கையான சிந்தனையுடன் அது தொடரும்!

தமிழில்: ஷோபனா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x