Published : 18 Apr 2016 08:27 AM
Last Updated : 18 Apr 2016 08:27 AM
மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. அதன் காரணமாக, ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை ஏப்ரல் 30-க்குப் பிறகு, வேறு மாநிலங்களில் நடத்துமாறு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பொதுவாகவே, அரசின் நிர்வாகப் பணிகளில் நீதிமன்றங்கள் தலையிடாது. ஆனால், இந்த விஷயத்தில் நீதிமன்றம் நிர்வாகத் துறையில் தானாகவே தலையிடுவது, மகாராஷ்டிரத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை எவ்வளவு தீவிரமானது, மக்களுடைய துயரம் எத்தகையது என்பதையே நமக்கு உணர்த்துகிறது.
ஒரு சில நாட்களுக்கு மட்டும் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளை நடத்தவிடாமல் தடுப்பதால், தண்ணீர்ப் பிரச்சினையின் கடுமை குறைந்துவிடப் போவதில்லை என்பதை நீதிபதிகள் வி.எம். கானடே, எம்.எஸ். கார்ணிக் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டிருக்கிறது.
ஏழைகள், நலிவுற்ற பிரிவினர், சிறுபான்மையோர் போன்றோருக்குத் தண்ணீர் கிடைக்கும் அளவிலும் பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினருக்குக் கிடைக்கும் அளவிலும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதையும் லோக்சட்டா என்ற இயக்கம் தொடுத்த இந்தப் பொதுநல வழக்கு வெளிக்கொணர்ந்துள்ளது.
தற்போது மகாராஷ்டிரத்தின் லாட்டூர் பகுதியில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை மிகக் கடுமையாக இருக்கிறது. அங்கு தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகளை யாரும் வழிமறித்து, வலுக்கட்டாயமாகத் தங்கள் பகுதிக்குக் கடத்திச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தண்ணீர் லாரிகளுக்கும் இறைப்புக் கிணறுகளுக்கும் நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் போலீஸ் காவல் போடப்பட்டிருக்கிறது. தண்ணீர் நிரப்பிச் செல்லும் ரயில் டேங்கர்களுக்கு ஆயுத போலீஸார் காவலாகச் செல்கின்றனர்.
இதே அளவுக்கு புந்தேல்கண்ட் பகுதியிலும் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் பரவிக்கிடக்கும் மலைப் பகுதி. மகாராஷ்டிரம், புந்தேல்கண்டில் மட்டும்தான் தண்ணீர்ப் பற்றாக்குறை என்றில்லை.. நாட்டின் சரிபாதி மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. நாட்டின் பெரிய நீர்த் தேக்கங்களில் 91-ல் கிட்டத்தட்ட தண்ணீர் வற்றி வெறும் தரைதான் தெரிகிறது என்று மத்திய தண்ணீர் ஆணையம் கூறுகிறது.
பசுமைப் புரட்சி கொடிகட்டிப் பறந்த பகுதிகளில் இப்போது நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. பாசனப் பரப்பை அதிகப்படுத்தியது, தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களையே தொடர்ந்து பயிரிட்டது, நிலத்தடி நீரை வரம்பின்றி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சியது, மழை தரும் காடுகளை அழித்தது, மழைநீர் சேமிப்புக்கான ஏரி, குளம், குட்டைகளைப் பராமரிக்கத் தவறியது, வணிக ஆதாயத்துக்காக நீர்த்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டி தண்ணீர் சேமிப்பைக் குறைத்தது என்று பல்வேறு காரணங்களால் இந்தப் பற்றாக்குறை பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கும் குறைந்தபட்சக் கொள்முதல் விலையைத் திருத்துவது, நிலத்தடி நீரை வரம்பின்றி எடுப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, பாசனக் கிணறுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதைக் கட்டுப்படுத்துவது போன்றவை தண்ணீர் இருப்பைப் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் பெருக்கவும் உதவக்கூடும்.
நாட்டு மக்களில் சரிபாதிப் பேர் விவசாயத்தைச் சார்ந்துதான் வாழ்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது. தண்ணீர்ப் பற்றாக்குறை என்பது மழைநீர் என்ற ஒற்றை அம்சத்தை மட்டும் சார்ந்ததல்ல. அதனால், ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்கக் கூடாது என்ற அற உணர்வோடு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT