Published : 07 Apr 2016 09:37 AM
Last Updated : 07 Apr 2016 09:37 AM
மேற்காசிய நாடுகளுடன் இந்தியா சுமுகமான உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறது என்பதையே பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய சவுதிப் பயணம் உணர்த்துகிறது. 8 மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுக்குச் சென்ற மோடி, தற்போது சவுதிக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இதற்குப் பிறகு இஸ்ரேலுக்கும் அவர் செல்லக்கூடும். மேற்காசிய நாடுகளுடன் உறவுகொள்ளும்போது ஒரு நாட்டுடனான நட்பு இன்னொரு நாட்டைக் கோபமுறச் செய்துவிடக் கூடாது என்ற அளவில் கவனமாகச் செயல்பட வேண்டியிருக்கிறது. சவுதி அரேபியாவிடமிருந்துதான் நாம் நீண்ட காலமாக கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாங்கிக்கொண்டிருக்கிறோம். அத்துடன் சவுதியில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலம் ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் கோடிக்கணக்கான ரூபாயை இந்தியாவுக்கு ஆண்டுதோறும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
சமீப ஆண்டுகளாக சவுதியும் இந்தியாவும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொண்டுவருகின்றன. இப்போதுள்ள ஒத்துழைப்பின் வேகத்தை அப்படியே பராமரிப்பதுடன் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லவும் மோடி விரும்புகிறார். பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கும் நாடுகளுடன் இந்தியாவும் உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வெளியுறவுக் கொள்கை உத்திப்படி இது மேற்கொள்ளப்படுகிறது. ஈரானுடன் பாகிஸ்தான் நெருங்குவதால், அந்நாட்டுடனான சவுதியின் உறவில் பதற்றம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், யேமனுக்குக் கூட்டுப்படையை அனுப்ப சவுதி முடிவு செய்தபோது அதில் சேர்ந்துகொள்ள முடியாது என்று பாகிஸ்தான் மறுத்தது.
எனவே, சவுதியுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள இதுவே உற்ற நேரம். ரியாத் நகரில் மோடி இறங்குவதற்குச் சற்று முன்னதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மீது சவுதியும் அமெரிக்காவும் கூட்டாகத் தடைகளை விதித்தன. மோடியின் பயணத்தின் இறுதியில் இந்தியாவும் சவுதியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. பாகிஸ்தானை மறைமுகமாக அந்தக் கூட்டறிக்கை குறிப்பிடுகிறது. அதேசமயம் பாகிஸ்தானுக்கும் சவுதிக்கும் இடையிலான உறவு மோசமடைந்துவிட்டது என்று கருதும் அளவுக்கும் ஏதும் நடந்துவிடவில்லை.
பயங்கரவாதச் செயல்களை இந்தக் கூட்டறிக்கை கண்டித்தாலும், மேற்காசியாவில் குறிப்பாக சிரியாவில் தீவிரவாதக் குழுக்களுக்கு சவுதி நிதியுதவி செய்வது அனைவரும் அறிந்ததே. இந்தியத் தொழிலாளர்களின் நிலை பற்றிய கவலை முதல் இந்தியாவில் உள்ள வஹாபிய ஆதரவாளர்களுக்கு சவுதி நிதியுதவி செய்வது வரை இந்தியாவுக்கும் சவுதிக்கும் இடையே பல பிரச்சினைகள் இருக்கின்றன. மேற்காசிய நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் பிரச்சினைகளில் சவுதி அரேபியா தீவிரப் பங்கேற்பாளராக இருக்கிறது.
எனவே, இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான விஷயங்களைப் பற்றி மட்டுமே மோடி பேசியிருக்கிறார். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நிலவும் குறைகளை ஒதுக்கிவைத்துவிட முடியாது. அவற்றைத் தீர்க்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டும். ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் வேளையில், ஏதேனும் ஒரு நாட்டுக்குச் சார்பாக இருப்பதாக யாரும் கருதிவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது. மேற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை, அந்நாடுகளுடன் சுமுக உறவை வளர்த்துக்கொள்ளும் அதே வேளையில், அவற்றிடமிருந்து சம தொலைவில் விலகியே நிற்பது இந்தியாவின் நீண்டகால நலனுக்கு நன்மையையே தரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT