Published : 21 Apr 2016 09:19 AM
Last Updated : 21 Apr 2016 09:19 AM

விஜய் மல்லையாவை விடக் கூடாது!

மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் மூன்று முறை அழைப்பாணை அனுப்பியும் நேரில் வரத் தவறிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ராஜீய கடவுச்சீட்டை செயலற்றதாக்கியிருக்கிறது வெளியுறவு அமைச்சகம். கருப்புப் பணத்தை வெள்ளையாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்பதற்காக அந்த அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அவரது கடவுச்சீட்டைச் செயலிழக்க வைக்கும் நடவடிக்கையை அரசு உடனடியாக எடுத்திருப்பது சரியானது.

விஜய் மல்லையாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஜூன் மாத இறுதியில் நிறைவுபெறுகிறது. “நாட்டைவிட்டு ஓடவில்லை; ஓட வேண்டிய அவசியமும் எனக்கில்லை” என்று கூறும் மல்லையா, வீண் சமாதானங்களை வெளிநாட்டில் இருந்துகொண்டு சொல்லாமல் விசாரணைக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதே நல்லது. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம்கூடப் பரிவு காட்டியது. ஏப்ரல் 21 வரையில் அவர் விளக்கம் தர அவகாசம் தந்தது. வங்கிகளிடம் வாங்கிய சுமார் ரூ. 9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பது மட்டும் அவர் மீதான புகார் இல்லை; ஐடிபிஐ வங்கியிடமிருந்து கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்துக்காக ரூ.900 கோடி ‘கடன் பெற்ற விதம்’ குறித்தும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. இதில்தான் மோசடிக் குற்றச்சாட்டு கடுமையாக இருக்கிறது. மும்பை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில்தான் அவருக்குப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணையைப் பிறப்பித்திருக்கிறது.

தொழிலதிபர்களின் தவறான முடிவால் அல்லது வர்த்தகச் சூழலில் ஏற்படும் மாறுதல்களால் நஷ்டம் ஏற்பட்டிருந்தால், அதைத் தெளிவாக விளக்கி வங்கிகளை நம்பச் செய்ய முடியும். நிர்வாகத்தைக் கவனிக்காமல் தேவையற்ற வீண் விவகாரங்களில் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டதன் விளைவுதான் இந்தத் தொழில் நிறுவனங்கள் நொடித்துப் போனதற்குக் காரணம்.

‘‘தொழிலதிபர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும்போதே அதில் உள்ள இடர்ப்பாடுகளை அவை அறியும்; ஏமாற்று அல்லது மோசடி காரணமாக என்னால் கடனை அடைக்க முடியாமல் போக வில்லை. தொழில் நடத்தும்போது ஏற்படும் ஏற்ற இறக்கங்களா லேயே அப்படி நிகழ்ந்தது. அதற்காக என்னை மோசமானவனாகச் சித்தரிக்கின்றன ஊடகங்கள். எனக்கு எதிரான உணர்வு அதிகமாக இருப்பதால் நாடு திரும்ப இது உசிதமான நேரம் இல்லை என்று கருதுகிறேன்” என்று தலைமறைவாக இருந்துகொண்டு விளக்கம் அளித்திருக்கிறார் மல்லையா. இப்படித் தன் தவறுகளை மறைக்க அவர் என்ன விளக்கங்களைக் கூறினாலும் எடுபடாது. அதேசமயம், சில வங்கிகளின் நிர்வாகிகள் அவர் அளித்த பரிசுகளாலோ அல்லது அவர் அளித்த சலுகைகளாலோ கவரப்பட்டு அவருடைய தொழிலின் தன்மையையும் தொழில் நிறுவனத்தின் வலுவையும் ஆராயாமல் பொதுப் பணத்தை அள்ளிக்கடனாக அளித்திருக்கின்றனர் என்று மக்கள் யூகிக்க இடம் இருக்கிறது.

விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். அவர் மீது இப்போது செலுத்தியிருக்கும் நெருக்குதலை மத்திய அரசு எந்தக் காரணத்துக்காகவும் தளர்த்தக் கூடாது. சட்டபூர்வமாகவும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும். முழு விசாரணை நடத்தப்பட்டு, விஜய் மல்லையாவோடு சேர்ந்து இந்த முறைகேட்டில் தொடர்புடைய அரசுசார் அலுவலர்கள், வங்கி அதிகாரிகள் என்று அனைத்துத் தரப்புகளும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x