Published : 25 Apr 2016 08:41 AM
Last Updated : 25 Apr 2016 08:41 AM
விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. விளைபொருட்களை விற்பதற்கான சந்தை இன்றுவரை விவசாயிகளுக்குச் சாதகமாகவோ, லாபகரமாகவோ இருந்ததில்லை. சாகுபடி செய்யும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காததால், கிடைத்த விலைக்கு விற்றே தீர வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இணையம் வழியாக நேரடியாக விற்பனை செய்ய வழிவகை செய்யும், ‘தேசிய வேளாண்மைச் சந்தை’ (என்.ஏ.எம்.) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்திருக்கிறார்.
இதுவரை, விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், அடிப்படையில் அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றன. இடைத்தரகர்களிடம் சிக்கி விவசாயிகள் நஷ்டப்படக் கூடாது என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ‘வேளாண் விளைபொருள் சந்தை’ சட்டம் ஒரு உதாரணம். விளைபொருட்களை உள்ளூர் மண்டியில்தான் முதலில் விற்க வேண்டும் என்றும், உரிமம் பெற்ற தரகர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லும் அச்சட்டம், விற்பனையில் கிடைக்கும் தொகைக்கு உயர் வரிகளையும், கட்டணங்களையும் விதிக்கிறது. இப்படியான சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘தேசிய வேளாண்மைச் சந்தை’ திட்டம் நம்பிக்கையளிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
நாட்டின் அனைத்து விவசாய மண்டிகளும் இந்த வலையமைப்பில் இணைப்பு பெறும். மாவட்டம், மாநில எல்லைகளைத் தாண்டி தொலைதூரத்தில் உள்ளவர்களின் தேவைகளைக்கூட இதன் மூலம் பூர்த்திசெய்ய முடியும். 8 மாநிலங்களில் உள்ள 21 மண்டிகள் இப்போது இணைப்பு பெற்றுள்ளன. 2018 மார்ச் மாதத்துக்குள் நாட்டில் உள்ள 585 மண்டிகளையும் இணைத்துவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், இடைத்தரகர்களை விவசாயிகளால் அடியோடு தவிர்க்க முடியாவிட்டாலும், தங்களுடைய விளைபொருட்களுக்கு நாட்டின் பிற சந்தைகளில் அதிகபட்சம் என்ன விலை கிடைக்கிறது என்று அறிந்துகொண்டு பேரம் பேச முடியும். நாடு முழுவதற்கும் ஒரே அளவிலான ‘லெவி’ (கட்டாயக் கொள்முதல்) அமலுக்கு வரப்போகிறது. அதன் பின்னர், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்துக் கிடக்கும் சந்தைகள்கூட இணைப்பு பெற்று நாடு முழுக்க ஒரே மண்டலமாகிவிடும். விலையும் கூடுதலாகக் கிடைக்கும். இந்திய உணவு கார்ப்பரேஷன் (எஃப்.சி.ஐ.) போன்ற பெருங்கொள்முதல் அமைப்புகள் நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்துகூட உணவு தானியங்களைக் கொள்முதல் செய்துவிட முடியும்.
அதேசமயம், இந்தச் சந்தை ஏற்பட்டுவிடுவதாலேயே விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகிவிடும் என்று அரசு கூறுவதை நம்ப முடியவில்லை. எல்லா பிராந்தியங்களிலும் இத்திட்டம் எப்படி விரைந்து செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி இருக்கிறது. மத்திய அரசு உருவாக்கியிருந்தாலும் இதில் விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள்தான் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உரிமம் வழங்குவதற்கான விதிகளையும் கெடுபிடிகளையும் குறைப்பது, வரிகளை அதிகம் விதிக்காமல் விற்பனை எளிதாகவும் விரைவாகவும் நடைபெற அனுமதிப்பது ஆகியவை இத்திட்டத்தின் வெற்றியைச் சாத்தியமாக்கும்.
இத்திட்டத்துக்குத் தேவைப்படும் எல்லா அடித்தளக் கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேம்படுத்த வேண்டும். இதற்கான கணினி மென்பொருள் உதவியுடன், இதில் இணையும் மண்டிகளுக்கு தலா ரூ. 30 லட்சம் தருவதாகவும் அரசு கூறியிருக்கிறது. இது போதாது. குறைந்தபட்சம் திட்டத்துக்கு ரூ.200 கோடியாவது ஒதுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாய விளைபொருட்களைப் பதுக்கிவைத்துக் கொள்ளை லாபம் அடிக்கும் ஆதிக்க சக்திகள் இந்தச் சந்தை வெற்றிகரமாகச் செயல்படுவதை அனுமதிக்காது. அவற்றை முறியடிக்க வேண்டியது அரசு, விவசாயிகள் என்ற இருதரப்பின் கைகளில்தான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT