Published : 15 Apr 2016 06:55 AM
Last Updated : 15 Apr 2016 06:55 AM
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகங்களில் (ஐ.ஐ.டி.) கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.2 லட்சமாக உயர்த்துவதென்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. கல்விக் கழகங்களுக்கு ஏற்பட்டு வரும் செலவுகள் அதிகரித்துவிட்டதால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று காரணம் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆண்ட காலத்திலும் ஐ.ஐ.டி. கட்டணம் 2 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடைசியாக ரூ.25,000 என்பதிலிருந்து ரூ.90,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்த உயர்வுகள் அனைத்தும் நிபுணர் குழுக்களின் பரிந்துரைகள் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போதும் நலிவுற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கு, அவர்களுடைய சமூக பொருளாதார பின்தங்கிய நிலைமை ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது. கல்வி பெறுவது என்பது நாட்டு மக்களின் அனைவருக்கும் அடிப்படையான உரிமை, அது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
இந்தியா என்ற புதிய இளம் நாட்டின் ஆற்றல்களை வளர்க்க தீர்க்கதரிசியாகச் சிந்தித்துச் செயல்பட்ட முதல் பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேரு, தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படவும் அக்கல்வி இந்நாட்டில் வேர் பிடிக்கவும் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களை முதலில் ஏற்படுத்தினார். “இந்த மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல தரமான கல்வியையும் பயிற்சியையும் அளித்துவிட்டு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவறவிடுவதைப்போன்ற முட்டாள்தனமான செய்கை வேறெதுவும் இல்லை” என்று ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உறைக்கும் வகையில் கரக்பூர் ஐ.ஐ.டி.யில் 1956-ல் நடந்த பட்டமளிப்பு விழாவில் நேரு பேசினார்.
அதற்குப் பிறகும் ஏராளமான மாணவர்கள் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்தபிறகு மேற்கொண்டு பயிலவும் ஆராய்ச்சி செய்யவும் நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கவும் வெளிநாடுகளுக்குத்தான் அதிக எண்ணிக்கையில் சென்றனர். மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான தொழில்நுட்பக் கல்லூரியை வழங்கிய இந்திய அரசுக்கோ, இந்தியச் சமூகத்துக்கோ அவர்களுடைய கல்வி பயன்படுகிறதா என்ற கேள்வியும் பல தளங்களில் எழுப்பப்பட்டது.
தற்போது உள்நாட்டிலேயே தயாரிப்பதையும் தொழில் தொடங்குவதையும் அரசு ஊக்குவிப்பதால் பட்டம் பெற்ற மாணவர்களில் சிலர் இதைப் பயன்படுத்திக்கொள்ள முன்வருகின்றனர். மாணவர்களுடைய திறமையைப் பயன்படுத்தும் வகையில் அவர்களை உள்நாட்டிலேயே தக்கவைத்துக்கொள்ள அரசும் முயற்சி செய்ய வேண்டும்.
கல்வி நிலையங்களின் சுதந்திரத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். கல்வி பயில்வதில் அனைவருக்கும் வாய்ப்புகளும் உரிமைகளும் தரப்பட வேண்டும். பண வசதி இல்லாததால் அறிவுக்கூர்மையுள்ள மாணவர்கள் உயர் தொழில்நுட்பக் கல்வியைப் படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது; வட்டியில்லாத கடன், மானிய உதவியுடன் கூடிய கடன் என்று ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியுதவி கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் மாணவர்களின் ஆர்வம், ஆற்றலுக்கேற்ப கல்வி மானியம் அளிக்க முன்வரும் புரவலர்களும் அறக்கட்டளைகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இது தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட நினைக்கும் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியான திட்டமாக விளங்க வேண்டும். ஏனெனில், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இன்றைக்கு மிக மிக அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT