Published : 05 Apr 2016 08:52 AM
Last Updated : 05 Apr 2016 08:52 AM

தவிர்க்கக்கூடியவையே விபத்துகளின் உயிரிழப்புகள்!

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் சென்னைக்கு இரண்டாவது இடம். சென்னையில் ஒரு லட்சம் பேரில் 26.6 பேர் என்ற அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள், நடந்துசெல்வோர், சைக்கிள் ஓட்டிகள், இரு சக்கர மோட்டார் வாகன ஓட்டிகள் அதிகம் பேர் விபத்துகளில் உயிரிழப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையில் முதலிடத்தில் பிரேசிலின் ஃபோர்டலிசா நகரம் இருக்கிறது.

ஜெய்ப்பூர் (4-வது இடம்), இந்தூர் (16), கோல்கத்தா (23), டெல்லி (24), பெங்களூர் (25), மும்பை (40) ஆகிய இந்திய நகரங்களும் உயிரிழப்புகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கின்றன. சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் சைக்கிள் ஓட்டிகளும் நடந்துசெல்வோரும்தான் அதிகம். உதாரணமாக, மும்பையின் உயிரிழப்புகளில் 60% பேர் இத்தகையவர்களே. 2050-ம் ஆண்டுவாக்கில் உலகில், வாகனங்களின் எண்ணிக்கை 250 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, சாலை விபத்துகளைச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

சாலை விபத்துகளால் உடல் ஊனம் அடைந்தவர்களில் தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் பலர். வேலை இழந்தவர்கள் அதிகம். காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சைக்குச் செலவு செய்து கடனில் மூழ்கிய குடும்பங்கள் பல. இப்படிப் பல்வேறு பாதிப்புகளை விபத்துகள் ஏற்படுத்தியிருக்கின்றன. சாலை விதிகளைப் பின்பற்றாமை, அலட்சியம், அதிவேகம் என்று பல விஷயங்கள் சாலை விபத்துகளுக்குக் காரணமாக அமைகின்றன.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இரவு நேர சேவை குறைவாகவே உள்ளது. தாங்கள் போக வேண்டிய இடத்துக்கு உரிய நேரத்துக்குள் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் லட்சக்கணக்கானோர் சொந்த வாகனங்களை வைத்துக்கொள்கின்றனர். சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகப் பேருந்துகள் தேவையான இடங்களில் 24 மணி நேரமும் இயங்கினால் சொந்த வாகனங்களின் எண்ணிக்கை குறையும். பொதுப்போக்குவரத்தை மேலும் விரிவாகவும் தரமாகவும் மாற்றும்போது விபத்துகள் குறையும். விபத்துகளில் சிக்கியோருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைத்தாலே பலரைக் காப்பாற்றிவிட முடியும்.

குடிசைப் பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தி வெளியேற்றுவதில் அரசு நிர்வாகம் தேவைக்கும் அதிகமாகவே ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அரசின் சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களைக் கட்டி போக்குவரத்தைத் தடை செய்பவர்கள் மீது அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை களை எடுப்பதில்லை. சாலையோர வியாபாரிகள், கட்சிகளின் கொடிக் கம்பங்கள், வீடுகளுக்குள் நிறுத்த முடியாமல் வீதியை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் என்று ஆக்கிரமிப்புகள் பல ரகம். சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களைக் கட்டுபவர்கள் தனி ரகம். இவர்களை நீக்கி சாலைகளைப் பாதுகாப்பானவையாக மாற்றுமாறு நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும், அவற்றை அமலாக்குவதில் வழக்கம்போல அரசு நிர்வாகம் அமைதி காக்கிறது.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம்தான் உலகிலேயே பாதுகாப்பான நகரமாக இருக்கிறது. அங்கே ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 0.7 பேர்தான் சாலை விபத்துகளில் இறக்கிறார்கள். வேகக் கட்டுப்பாட்டைக் கடுமையாக அமல்படுத்துவது, கார்கள், இருசக்கர வாகனங்களுக்குத் தனித்தனிப் பாதைகள், பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள், வேகமான காவல் துறை நடவடிக்கைகள் ஸ்டாக்ஹோம் நகரைப் பாதுகாப்பான நகரமாக்கியிருக் கின்றன. இவற்றை நாமும் பின்பற்றி விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். அரசு, மருத்துவமனைகள், நீதிமன்றம், சென்னை மாநகராட்சி, மாநகரப் போக்குவரத்துக் கழகம், காவல் துறை, கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தலாம். விபத்துகளில் உயிர்கள் இழப்பது தற்செயல் சம்பவங்கள் அல்ல. ஆழமான அக்கறை இருந்தால் நிச்சயம் உயிர்களைக் காக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x