Published : 24 Mar 2016 09:15 AM
Last Updated : 24 Mar 2016 09:15 AM
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பேசிய கட்சித் தலைவர் அமித் ஷா, நடைபெறவுள்ள 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் குறித்தும் பேசினார். தேசிய சக்திகளுக்கும் தேச விரோத சக்திகளுக்கும் இடையில் போர் தொடங்கிவிட்டதாக அவர் அறிவித்தார். அவர் விட்ட இடத்திலிருந்து பாஜகவின் மற்ற தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ரவி சங்கர் பிரசாத் போன்றவர்களும் அதே தொனியில் தங்களின் பேச்சுகளைத் தொடர்ந்தனர். அரசியல்ரீதியிலான மாறுபட்ட கருத்துகளை வரவேற்பதாகவும், ஆனால், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேச விரோதக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர்கள் முழங்கினர். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசப் பற்றுக்கும் தேசியவாதத்துக்கும் பாஜக எப்போதுமே முக்கியத்துவம் தந்து வந்திருக்கிறது என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டு, வழக்கமான பாணியில் நம்முடைய ஒரே தாரக மந்திரம் ‘வளர்ச்சி.. வளர்ச்சி.. வளர்ச்சி’ என்றார்.
செயற்குழுக் கூட்டத்தில் பேசியவர்கள் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸைத் தாக்கினார்கள். அதைத் தேச விரோதக் கட்சியாகச் சித்தரித்தனர். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷங்களை எழுப்பியவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நின்றதாக அமித் ஷா கடுமையாகச் சாடினார். பிரதமர் பதவிக்கு ஆபத்து என்ற நிலை வந்தவுடன் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்து, ஆயிரக்கணக்கானோரைச் சிறையில் தள்ளி, எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றைப் பறித்த கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, பேச்சு சுதந்திரத்தைத் தடை செய்யக் கூடாது என்று பேசுவது போலித்தனமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
பிஹாரில் காங்கிரஸ் ஏற்படுத்திய மகா கூட்டணியிடம் பலத்த அடி வாங்கியதால் அந்தக் கட்சியின் மீது பாஜக இன்னமும் கோபத்துடன் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதே வேளையில், மக்களவைப் பொதுத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமலிருப்பதும், கட்சியின் செல்வாக்கு சரிந்துவருவதும் தலைமைக்குத் தெரிந்திருக்கிறது. எனவே, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் இந்துத்துவக் கொள்கைகளுக்கு பாஜக திரும்பியிருக்கிறது.
மோடி பேசும் பிரச்சினைகளுக்கும் கட்சியின் இதர தலைவர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கும் இடையில் மலையளவு வித்தியாசம் காணப்படுகிறது. கட்சியின் மற்ற தலைவர்கள் மீது அவருக்குக் கட்டுப்பாடு இல்லை என்று இதைக் கொண்டு கருதலாம். அல்லது மக்களுடைய வாக்குகளைக் கவர இப்படி இருவேறு மாறுபட்ட முகங்களைக் காட்ட வேண்டும் என்று திட்டமிட்டே அவர்கள் பேசியிருக்கலாம். கடவுள் தந்த கொடைதான் மோடி, அவர் தீர்க்கதரிசி என்று மத்திய அமைச்சர் எம்.வெங்கைய நாயுடு புகழ்ந்தார். வளர்ச்சி பற்றி மோடி பேசும்போது, மற்றவர்கள் பாரத் மாதா கீ ஜெய் போன்ற கோஷங்களை எழுப்பிப் பெரும்பான்மையோரின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி செய்தார்கள். அவர்கள் எழுப்புவது ஒரே கோஷம்தான் அதை மக்கள் புரிந்துகொள்வது ஒரு மாதிரியாகவும் சங்கப் பரிவாரங்கள் புரிந்துகொள்வது வேறு மாதிரியாகவும் இருக்கும் என்பதே இந்த கோஷ அரசியலின் பின்புலம். வளர்ச்சியைப் பற்றி பாஜக பேசுவது எல்லாம் அதன் இந்துத்துவக் கொள்கைகளை மறைப்பதற்கான முகமூடியாகவே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT