Published : 05 Mar 2016 09:29 AM
Last Updated : 05 Mar 2016 09:29 AM

நினைவில் நிற்பீர்கள் சங்மா!

மக்களவைத் தலைவர் பதவி வகித்தவர்களில், மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் பூர்ண அஜிதோக் சங்மா. அவை நடவடிக்கைகளைத் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கிய காலத்தில்தான், அவைத் தலைவரின் முக்கியத்துவமும் ஆளுமையும் திறமையும் மக்களுக்குப் புரியத்தொடங்கின.

இயற்கை எழில் கொஞ்சும் காரோ மலைப் பகுதியில் எளிமையான கிராமத்தில் 1947-ல் பிறந்து, பெரிய போராட்டங்களுக்குப் பிறகு படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியவர் சங்மா. இளம் வயதிலேயே காங்கிரஸ் மூலம் அரசியலில் கால் பதித்து, தன்னை நோக்கி வந்த நிர்வாகப் பொறுப்புகளை உற்சாகமாகவும் திறமையாகவும் நிறைவேற்றி அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்தவர். நெருக்கடிநிலை விலக்கப்பட்ட பிறகு நடந்த பொதுத் தேர்தலில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் பெருந்தோல்வியை எதிர்கொண்டபோது மேகாலயத்தின் துரா தொகுதியிலிருந்து இந்த இளம் அரசியல்வாதி மக்களவையில் நுழைந்தார்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் என மூன்று பிரதமர்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். தொழில் துறை, வர்த்தகத் துறை, உள்துறை, தொழிலாளர் நலம், நிலக்கரி, செய்தி - ஒலிபரப்பு ஆகிய துறைகளில் துணை அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் செயலாற்றினார். தொழில் துறையில் பணியாற்றுகையில், தொழிற்சங்கங்கள் - ஆலை நிர்வாகங்கள் என்று இரு தரப்புக்கும் இடையே நம்பகமான மத்தியஸ்தராகச் செயல்பட்டு, அவர் பெற்ற அனுபவம்தான் பின்னாளில் மக்களவைத் தலைவர் பதவியில் அவர் சிறப்பாகப் பணியாற்ற உதவியது.

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர், மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு சங்மாவினுடையது. 1996 முதல் 1998 வரையில் அவர் மக்களவைத் தலைவராக இருந்தார். இக்கட்டான காலகட்டம் அது. மிகக் குறுகிய காலகட்டத்தில் வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் என்று மூன்று பிரதமர்களை அடுத்தடுத்து நாடு பார்க்க நேர்ந்த காலகட்டம். இந்தியா சுதந்திரம் பெற்ற பொன் விழா கொண்டாட்டத்தையொட்டி 1997 ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 வரை நடந்த நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் சங்மாவின் காலகட்டத்தில்தான் நடந்தது. வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் தேசிய அரசியலுக்கு நேரடிச் சாட்சியாக இருந்ததுடன் இந்திய ஜனநாயகம் மேலும் முதிர்ச்சியடையத் தன்னாலான பணியை மேற்கொண்டார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மக்களவையிலும் சட்டப் பேரவைகளிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை அவர்களுக்கு ஒதுக்குவதற்காக இரு வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட சங்மா காரணமாக இருந்திருக்கிறார்.

காங்கிரஸில், “சோனியா காந்தி வெளிநாட்டவர்; அவர் இந்தியாவின் பிரதமராகக் கூடாது” என்று போர்க்கொடி உயர்த்தி வெளியேறி, தேசிய ஜனநாயக காங்கிரஸைத் தொடங்கிய சரத் பவார், தாரிக் அன்வர் உள்ளிட்டவர்களில் சங்மாவும் ஒருவர். பின்னாளில், சோனியாவுடன் பவார் மீண்டும் நெருங்கியபோது, அங்கிருந்து விலகித் தனிக் கட்சி தொடங்கினார். குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். தீவிர அரசியலிலிருந்து கொஞ்சம் விலகியே இருந்தவர், மார்ச் 4 அன்று மறைந்தார். அரசியல் அதிகாரப் புறக்கணிப்பில் அமிழ்த்தப்பட்ட வட கிழக்கு மாநிலங்கள் தேசிய அரசியலுக்குக் கொடுத்த பங்களிப்புகளில் சங்மாவின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x