Published : 31 Mar 2016 09:12 AM
Last Updated : 31 Mar 2016 09:12 AM

விமர்சனங்களுக்குக் காது கொடுங்கள்!

தமிழக முதல்வர் சட்டப்பேரவைக்குச் சென்றாலும், கொடநாட்டுக்குச் சென்றாலும் அது ஒரு நிகழ்ச்சியாக்கப்படும் நிலைக்காக இந்த அரசு என்றைக்கும் சலனப்பட்டதாகத் தெரிந்ததில்லை.

முதல்வரை சந்திப்பது கற்பனைக்கப்பாற்பட்ட காரியம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள் பொதுமக்கள். செய்தியாளர்களோ அது பாதை தெரியாத பயணம் என்கிறார்கள். என்றாலும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அதை வெளிக்காட்டியது இல்லை. இந்நிலையில்தான், தமிழகத்தில் மின் திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பது அரிதான விஷயமாகிவிட்டதாகவும், மின் திட்டங்கள் தொடர்பாக முதல்வரைச் சந்திக்க முடியவில்லை என்றும் மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியிருக்கிறார்.

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் மாநிலத்திற்குள் ஒரு மாநிலம் செயல்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 29 மாநில முதல்வர்களில், 28 மாநில முதல்வர்களையும் என்னால் நேரடியாக அணுக முடியும், அந்தந்த மாநில மின் துறை அமைச்சர்களுடன் பேசமுடியும். ஆனால், தமிழ்நாடு மின் துறை அமைச்சருக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டால், ‘இருங்கள் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன்’ என்பார்” என்று குறிப்பிட்டிருக்கிறார் பியூஷ் கோயல். அவரது கருத்தை சக அமைச்சர்களான பொன். ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேகர் போன்றவர்களும் ஆமோதித்திருக்கிறார்கள். முதல்வரைச் சந்திக்க முடியவில்லை எனும் சூழலோடு முக்கியமான இன்னொரு விஷயத்தையும் விவாதத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் பியூஷ் கோயல். எந்த விஷயத்திலும் பேசுவதற்கு/முடிவெடுப்பதற்கான அதிகாரம், மாநில அமைச்சர்களிடம் இல்லை அல்லது அப்படியான செயல்பாடு தமிழக அமைச்சர்களிடம் இல்லை என்பதே அது. இந்தக் குற்றச்சாட்டுக்குத் தமிழக அரசிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் எதிர்வினைகள் அயற்சியையே ஏற்படுத்துகின்றன. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இதுவரை முதல்வரை, பிரதமர், மத்திய அமைச்சர்கள் சந்தித்த தேதிகளைப் பட்டியலிட்டு, “இது அரசியல் ஆதாயத்துக்காக வெளியிடப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டு” என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், “இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை” என்று பதில் குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருக்கிறார்.

மத்திய அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களில் ஒருவர் பியூஷ் கோயல். நாட்டின் தேவைக்கேற்ப நிலக்கரி உற்பத்தி, அனல் மின்னுற்பத்தியைச் சாதனை அளவுக்கு அதிகப்படுத்தியது, நாட்டின் முதல் 100 முக்கியமான அனல் மின் நிலையங்களில் குறைந்தபட்சம் 23 நாட்கள் உற்பத்திக்குத் தேவைப்படும் நிலக்கரியைக் கையிருப்பாக இருக்கவைத்தது, ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு, ஒரே விலை என்பதை உறுதிசெய்தது, மின்னுற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.12-18 என்றிருந்ததை, ரூ. 2.35 ஆகக் குறைத்தது என்று அவரது துறையில் அவர் மேற்கொண்டிருக்கும் பல நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இவ்வாறு இருக்க முழு வீச்சில் கோடை தன் வெப்பத்தைக் கக்க ஆரம்பிக்கும் முன்னரே மின்வெட்டை எதிர்கொள்ளும் மாநிலமாகவே நம்மைத் தமிழக மின் துறை அமைச்சகம் வைத்திருக்கிறது.

நாம் எங்கே பலவீனமாக இருக்கிறோமோ அங்கே பலமாக இருக்கும் ஒரு துறையைச் சேர்ந்த அமைச்சர் நம்மைத் தேடி திட்டங்களுடன் வருகையில் அவருடன் பேசக்கூட முடியாத நிலையில் எப்படி இருக்க முடியும் என்று தெரியவில்லை. சென்னை வெள்ளத்தின்போது, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடுவதற்கான உத்தரவுக்காக அதிகாரிகள் காத்துக் கிடந்ததாக எழுந்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு இங்கே நம் நினைவுக்கு வருகிறது. ஒரு மக்கள் பிரதிநிதி அதிலும் மாநில நலன் குறித்து பேச விரும்பும் ஒரு மத்திய அமைச்சர் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை என்று கூறினால், சந்திப்புக்கான வாய்ப்பை உருவாக்கித் தருவதே நல்ல ஆட்சியாளர்களுக்கான இலக்கணம். தவறுகளை நியாயப்படுத்திவிடுவது எளிது; ஆனால், அது தவறைவிடவும் பெரிய தவறு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x