Published : 25 Mar 2016 08:25 AM
Last Updated : 25 Mar 2016 08:25 AM

உத்தராகண்ட்: தவறான அரசியல் போக்கு!

உத்தராகண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை அடைந்திருக்கிறது. ஆளுங்கட்சியான காங்கிரஸும் எதிர்க்கட்சியான பாஜகவும் குடியரசுத் தலைவரிடம் நேரடியாகச் சந்தித்து முறையிடும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது. மாநில அரசின் நிதி நிலை அறிக்கை மீதான குரல் வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 அதிருப்திப் பேரவை உறுப்பினர்கள் எதிர்க்குரல் கொடுத்ததாகவும், பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது பாஜக. அத்துடன், முதலமைச்சர் ஹரீஷ் சிங் ராவத் தலைமையிலான அரசைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில், 9 அதிருப்திப் பேரவை உறுப்பினர்கள் உட்பட 36 பேரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக பாஜக கூறுகிறது. அரசியல் சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு மாறாக, ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஈடுபட்டுவருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர சதி நடக்கிறது என்று காங்கிரஸ் கூறிவந்த நிலையில், தற்போது அந்தக் கோரிக்கையை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது பாஜக.

இதற்கிடையே இம்மாதம் 28-ம் தேதி சட்டப் பேரவைக் கூட்டத்தை நடத்தி தனக்குள்ள ஆதரவை முதல்வர் ஹரீஷ் ராவத் நிரூபிக்க வேண்டும் என்று கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிருப்தியாளர்களுக்குத் தலைமை தாங்கும் சாகேத் பகுகுணா கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இவர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவின் மகன். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று விஜய் பகுகுணா வலியுறுத்தினார் என்றும் அதை முதல்வர் மறுத்ததால் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழையும் வெள்ளமும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கியதுடன், கடுமையான பொருளாதாரச் சேதத்தையும் ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட மாநிலத்தில்தான் இருபெரும் தேசியக் கட்சிகளும் அரசியல் ஆதிக்கம் பெற அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசலுக்குத் தலைமையும் முக்கியக் காரணம். 2012 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற கடுமையாகப் பாடுபட்டவர் ஹரீஷ் ராவத். ஆனால் விஜய் பகுகுணா, சோனியாவின் குடும்ப விசுவாசி என்பதால் முதல்வராக அறிவிக்கப்பட்டார். அவருடைய நிர்வாகம் திருப்தி அளிக்காததால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நீக்கப்பட்டு, ஹரீஷ் ராவத் முதல்வராக்கப்பட்டார். வரும் 2017-ல் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இப்படி ஒரு சூழல் உருவாகியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

அருணாசலப் பிரதேசத்தை அடுத்து காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் அதிருப்தியாளர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதும், அதற்கு பாஜக துணை போவதும் தொடர்கிறது. பாஜக தலைமையின் இந்தப் புதிய அரசியல் உத்தி முற்றிலும் தவறான போக்கு என்பதில் சந்தேகமில்லை. உத்தராகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கும் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவுக்கும் இடையிலான பிரச்சினையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பாஜக முயல்கிறது. ஆளும் கட்சிக்குள்ள பெரும்பான்மை வலு சட்டப் பேரவையில் மட்டுமே சோதித்துப் பார்க்கப்பட வேண்டும். அரசியல் சட்டமும் அரசியல் தர்மமும் காப்பாற்றப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x