Published : 18 Mar 2016 09:06 AM
Last Updated : 18 Mar 2016 09:06 AM

யமுனைக்கு செய்த துரோகம்

டெல்லியில் யமுனை நதிக் கரையில் உள்ள மயூர் விஹார் பகுதியில் மிகப் பெரிய கலாச்சார விழாவை மார்ச் 11 முதல் 13 வரை நடத்தியது ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அறக்கட்டளை அமைப்பு.

பிரம்மாண்டமான மேடையும், ஆயிரக்கணக் கானோர் அமர்ந்து பார்க்கும்வகையில் பார்வையாளர் பகுதியும் அமைக்கப்பட்டிருந்தன. இதற்காக யமுனை நதிக்கரையில் இருந்த இயற்கையான சூழல் நாசப்படுத்தப்பட்டது. மத்திய அரசும் டெல்லி அரசும் சற்றும் முன்யோசனை இன்றி நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்துவிட்டன.

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரும் விஷயத்தில், அதிகாரிகள் எப்படி முன் யோசனையும் சூழலியல் குறித்த புரிதல்களும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். வாகனங்கள் வந்து செல்லவும் நிறுத்தப்படவும் யமுனைக் கரையில் இருந்த தாவரங்கள், இயற்கையான புதர்கள் போன்ற அமைப்புடன் கூடிய பல்லுயிர் வாழிடம் அழிக்கப்பட்டிருக்கிறது. மத்திய கலாச்சார அமைச்சகம், உத்தரப்பிரதேச அரசு, டெல்லி அரசு, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி ஆகியவை இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது. இத்தனைக்கும் டெல்லி மாநகரின் தண்ணீர் தேவை யமுனையால்தான் பூர்த்திசெய்யப்படுகிறது.

கங்கை உள்ளிட்ட ஆறுகளைச் சுத்தப்படுத்துவதைப் பெரிய இயக்கமாகவே மேற்கொண்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இத்தகைய அத்துமீறலுக்கு உடந்தையாக இருப்பது வியப்பைத் தருகிறது. நதியை மக்கள் எளிதாகக் கடப்பதற்கான பாலங்களை ராணுவத்தைக் கொண்டு கட்டித்தரச் செய்ததும் கண்டிக்கத் தக்கது. இதைத் தனியார் அமைப்புகள் மூலம் செய்திருக்க வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனே விசாரணைக்கு ஏற்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயம், டெல்லி வளர்ச்சி ஆணையம் அனுமதி வழங்கிய பிறகு அந்தப் பகுதியில் தான் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் என்ன என்று வாழும் கலை அமைப்பு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்பதைக் கவனத்தில் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக ரூ.5 கோடி அபராதம் விதித்தது. “ஒரு நயா பைசாகூடச் செலுத்த மாட்டேன், சிறைக்குச் செல்லத் தயார்” என்று அறிவித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர், பிறகு ரூ. 25 லட்சம் அபராதத்தை முதல் தவணை யாகச் செலுத்தவும், நிபந்தனைகளுக்கு உட்படவும் சம்மதித்தார். ஆற்றுக்கும் வெள்ளப் படுகைக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை விரிவாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு சிறப்புக் குழுவொன்றுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அப்பகுதியில் குவிந்த குப்பைகளை அகற்ற வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த 1,000 உறுப்பினர்கள் ஈடுபடுவார்கள் என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால்,

“30 பேர்கூட இப்பணியில் ஈடுபடவில்லை; குப்பை பொறுக்கும் சிறுவர்கள்தான் அதையும்கூடச் செய்துவருகிறார்கள்”என்கிறார்கள். சூழலைக் கெடுத்தவர்தான் அதைச் சீர்படுத்தித் தர வேண்டும் என்ற அடிப்படையில், வாழும் கலை அமைப்புதான் நதியை அதன் பழைய நிலைக்கு மீட்பதற்கான செலவுகளை முழுதாக ஏற்க வேண்டும். இதற்கான நிதியைத் திரட்டுவதும் பணிகளை மேற்கொள்வதும் அந்த அமைப்புக்கு இயலாத செயலாக இருக்க முடியாது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இதே கோரிக்கையை விடுத்திருப்பது வரவேற்கத் தக்கது. யமுனையில் உள்ள திடக் கழிவுகளை அகற்றுவதுடன், ஆற்றில் கழிவுநீர் வந்து கலக்காமல் தடுக்க வேண்டும். மழைக் காலங்களில் நீர்ப்பிடிப்பும் நீர்கொள்ளளவும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும். அதுதான் யமுனைக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த கைம்மாறாக இருக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x