Published : 17 Mar 2016 08:55 AM
Last Updated : 17 Mar 2016 08:55 AM

வீடு வாங்குவோருக்குப் பாதுகாப்பு!

அரசியல்ரீதியிலான கருத்துவேறுபாடுகள் தீவிரமாக இருந்தபோதிலும் மனை வணிக (ரியல் எஸ்டேட்) மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றித் தந்திருக்கிறது.

இது வரவேற்கத்தக்கது. தனியார் நிறுவனங்களிடம் அடுக்ககம் அல்லது தனி வீடு வாங்கும் நுகர்வோர்களுக்குச் சட்டப்பூர்வமான பாதுகாப்பைத் தருகிறது இந்த மசோதா.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த முயற்சி பல சுற்றுப் பேச்சுகள், ஆய்வுகள், பரிந்துரைகள், திருத்தங்களுக்குப் பிறகு இறுதி வடிவம் பெற்றிருக்கிறது. இதனால் மனை வணிகத் தொழில் மட்டுமல்ல பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.

ஒவ்வோராண்டும் சுமார் 10 லட்சம் பேர் வீடு அல்லது அடுக்ககம் வாங்குகின்றனர். மத்திய வீடமைப்பு, நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடுவின் கூற்றுப்படி நாடு முழுவதும் இத்துறையில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 76,044. மனை வணிகத்துறை மட்டும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 9% அளவுக்கு பங்களிப்பைச் செய்கிறது. 2011 முதல் 2015 வரையில் மொத்தம் ரூ.13.70 லட்சம் கோடி மதிப்புக்கு 17,526 வீடமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் மனை வணிக ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். 500 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு இந்த ஆணையத்தில் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகளை ஆணையம் கண்காணிக்கும். இதன்மூலம் கருப்புப் பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்படும். அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவுப் பகுதி உள்ளிட்ட பொது இடங்களை வாடிக்கையாளர்களுக் குவிற்கக்கூடாது. வீடு அமைந்துள்ள இடத்தை மட்டுமே (கார்பட் ஏரியா) விளம்பரத்தில் குறிப்பிட வேண்டும்.

வாடிக்கையாளரிடம் கட்டுமான நிறுவனம் பெற்ற பணத்தில் 70% தொகையை வங்கியில் தனிக் கணக்கு தொடங்கி காப்புத் தொகை கட்ட வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காவிட்டால் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில்,வாடிக்கையாளர்களுக்குக் கட்டுமான நிறுவனம் வட்டித் தொகை வழங்கவேண்டும். 5 ஆண்டுகளுக்கு வீட்டில் ஏற்படும் பழுதுகளைக் கட்டுமானநிறுவனங்களே சீர்செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பிரச்சினை எழுந்தால், மாநில ‘ரியல் எஸ்டேட்’ ஒழுங்கு முறை ஆணையத்தில் முறையிடலாம். 60 நாட்களுக்குள் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். கட்டுமான நிறுவன அதிபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், வாடிக்கையாளர்கள், ஏஜெண்டுகள் முறைகேடு செய்தால் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

இதனால் வீடு வேண்டுவோர் நம்பிக்கையுடன் நல்ல கட்டுமான நிறுவனங்களை நாட முடியும். வீடுகளைக் கட்டுவதில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் நாளடைவில் குறையும். குடியிருப்புகள் அமைப்பது என்பது பெரிய தொழிலாக உருவாகவும் வாய்ப்பிருக்கிறது.

மத்திய அரசின் இந்த மசோதாவை மாநில அரசுகள் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். அத்துடன், கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நல வாரியங்களும் சீரமைக்கப்பட்டு அவர்களுக்கும் நல்ல ஊதியம், படிகள், சலுகைகள், மருத்துவ வசதி, ஆயுள் காப்பீடு போன்றவை வழங்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x